search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தந்தையை கொலை செய்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த மகன் தற்கொலை
    X

    தந்தையை கொலை செய்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த மகன் தற்கொலை

    திருப்பத்தூரில் பணம் கொடுக்க மறுத்த தந்தையை கொலை செய்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த மகன் தற்கொலை செய்து கொண்டார்.

    திருப்பத்தூர்:

    வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் ஜெயா நகர் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 65). ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றிருந்தார். இவரது மகன் ராஜ்குமார் (37). இவர் வேலைக்கு செல்லாமல் ஊதாரித்தனமாக சுற்றிக் கொண்டு அடிக்கடி தனது தந்தை மனோகரனிடம் குடிக்க பணம் கேட்டு தகராறு செய்து வந்தார்.

    இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி ராஜ்குமார் தனது தந்தையிடம் குடிக்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது மனோகரன் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த ராஜ்குமார் தனது தந்தையை கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார்.

    பின்னர் திருப்பத்தூர் டவுன் போலீசில் சரணடைந்தார். அவர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிந்து கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், கடந்த மாதம் ராஜ்குமார் ஜாமீனில் வெளியேவந்தார்.

    அவரது வீட்டின் எதிரே உள்ள காசி என்பவரது வீட்டில் கல்லூரி மாணவர்கள் சிலர் தங்கி படித்து வருகின்றனர்.

    நேற்று அவர்கள் வெளியில் சென்ற நேரத்தில் ராஜ்குமார் அவர்களது அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர், மாலையில் மாணவர்கள் அறைக்கு வந்து பார்த்தபோது ராஜ்குமார் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து திருப்பத்தூர் டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் அமர்நாத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இறந்த ராஜ்குமார் வேலூர் மத்திய சிறையில் சைக்கோ போல் செயல்பட்டு வந்ததால் அவரை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, ஜாமீனில் வெளிவந்த ராஜ்குமார் திருப்பத்தூர் பகுதிகளில் சைக்கோ போல் சுற்றித்திரிந்து கொண்டிருந்தாராம்.

    தற்போது தனது வீட்டின் எதிரே உள்ள ஒரு வீட்டில் அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×