search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடியாத்தம் பன்றி காய்ச்சலுக்கு விவசாயி பலி
    X

    குடியாத்தம் பன்றி காய்ச்சலுக்கு விவசாயி பலி

    பன்றிக்காய்ச்சலுக்கு விவசாயி பலியான சம்பவம், குடியாத்தம் பகுதியில் உள்ள பொதுமக்களை அச்சமடைய செய்துள்ளது. #Swineflu

    குடியாத்தம்:

    குடியாத்தம் பீமாபுரத்தில் மேல்ஆலத்தூர் ரோட்டை சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் ராமமூர்த்தி (வயது43), விவசாயி. இவருக்கு கல்பனா என்ற மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

    இந்த நிலையில் ராமமூர்த்தி கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். உள்ளூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பிறகும், காய்ச்சல் தீவிரமடைந்ததால், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை அளித்தும் அவருக்கு காய்ச்சல் குறையவில்லை.

    இதையடுத்து, சென்னை பெரும்பாக்கம் சேரன் நகரில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டார். அங்கு, ராமமூர்த்தியின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அதில், பன்றிக்காய்ச்சலால் அவர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி ராமமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார்.

    பன்றிக்காய்ச்சலுக்கு விவசாயி பலியான சம்பவம், குடியாத்தம் பகுதியில் உள்ள பொதுமக்களை அச்சமடைய செய்துள்ளது. பீமாபுரத்தில் நகராட்சி நிர்வாகம் தீவிர சுகாதார பணிகளை செய்து வருகிறது.

    மேலும், மருத்துவ குழு முகாமிட்டு கிராம மக்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும் பலருக்கு காய்ச்சல் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

    அவர்கள் எதுபோன்ற காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து மருத்துவக்குழுவினர் தீவிரமாக கண்காணிக்கின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #Swineflu

    Next Story
    ×