search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் பீர்பாட்டிலால் சரமாரி குத்தி டெம்போ டிரைவர் கொலை- நண்பர் சிக்கினார்
    X

    புதுவையில் பீர்பாட்டிலால் சரமாரி குத்தி டெம்போ டிரைவர் கொலை- நண்பர் சிக்கினார்

    புதுவையில் பீர் குடிக்கும் தகராறில் டெம்போ டிரைவரை குத்தி கொலை செய்த நண்பரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை முத்திரையர் பாளையம் சேரன் நகர் சோழன் வீதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் சந்துரு (வயது 26). இவர் சொந்தமாக டெம்போ வைத்து ஓட்டி வருகிறார். காலையில் இருந்து மதியம் வரை சந்துரு டெம்போ ஓட்டுவார்.

    அதன் பிறகு மற்ற நேரங்களில் அவரது நண்பர் தியாகு டெம்போவை ஓட்டுவார்.

    நேற்று மதியம் சந்துரு டெம்போவை தியாகுவிடம் ஒப்படைத்து விட்டு சென்றார். நேற்று இரவு வரை அவர் வீட்டுக்கு வர வில்லை.

    எனவே, வீட்டில் உள்ளவர்கள் அவரை தேடினார்கள். இன்று காலை கதிர்காமம் தட்சிணாமூர்த்தி நகரில் தனியார் பள்ளி அருகே உள்ள மைதானத்தில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்த சந்துருவின் தாயார் தனது மகனாக இருக்கலாம் என்று கருதி அங்கு சென்று பார்த்தார். அதில் சந்துருதான் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.

    கோரிமேடு இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலையரசன், வடிவழகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தா, சூப்பிரண்டு ரச்சனாசிங் ஆகியோரும் நேரில் பார்வையிட்டனர்.

    சந்துருவுடன் கழுத்து மற்றும் முகம் பகுதியில் பீர் பாட்டிலால் சரமாரியாக குத்தப்பட்டு இருந்தது. அந்த பாட்டில் அருகே உடைந்து கிடந்தது.

    சந்துரு ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் அருகிலேயே ஸ்டாண்டு போட்டு நிறுத்தப்பட்டு இருந்தது. அதில், மாட்டு சாணத்தை கரைத்து ஆங்காங்கே தடவப்பட்டு இருந்தது.

    கைரேகை தெரிய கூடாது என்பதற்காக அவ்வாறு செய்யப்பட்டு இருந்தது தெரிந்தது. போலீசார் கொலையாளிகள் யார்? என கண்டுபிடிக்க விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது நேற்று மாலை சந்துருவுடன் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அவரது நண்பர் சங்கர் மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறினார்கள்.

    சங்கரும் டெம்போ டிரைவராக இருந்து வந்தார். இருவரும் அடிக்கடி ஒன்றாக சென்று மது குடிப்பது வழக்கம்.

    எனவே, கொலைக்கும், சங்கருக்கும் தொடர்பு இருக்கலாம் என கருதி போலீசார் அவரை அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது நான்தான் சந்துருவை கொலை செய்தேன் என்று கூறினார்.

    நேற்று மதியத்தில் இருந்தே சந்துருவும், சங்கரும் மது குடித்துள்ளனர். முதலில் வேறு ஒரு இடத்தில் 2 பாட்டில் பீர் குடித்தனர். அதன் பிறகு இரவு 5 பீர் பாட்டில்களை இருவரும் வாங்கி வந்தனர்.

    கொலை நடந்த இடத்தில் வைத்து பீரை குடித்தார்கள். இந்த பீர் முழுவதையும் சந்துருதான் காசு போட்டு வாங்கி இருந்தார். இருவருக்கும் போதை தலைக் கேறிய நிலையில் சங்கரிடம் சந்துரு நான் தான் உனக்கு அடிக்கடி மது வாங்கி தருவேன். நீ எப்போதும் ஓசியிலேயே குடிக்கிறாய் என்று கூறி உள்ளார்.

    இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த சங்கர் பீர் பாட்டிலை எடுத்து சந்துருவின் முகத்திலும், கழுத்து பகுதியிலும் சரமாரியாக குத்தினார்.

    இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சந்துரு அந்த இடத்திலேயே உயிர் இழந்தார். அவர் இறந்து விட்டதை அறிந்ததும் தடயத்தை மறைப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சாணத்தை கரைத்து தடவினார்.

    சங்கரை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகிறார்கள்.

    சந்துருவின் பூர்வீக ஊர் மரக்காணம் ஆகும். 12 வருடங்களுக்கு முன்பு அவர்கள் குடும்பத்துடன் புதுவைக்கு வந்தனர். வருகிற தை மாதம் அவரது உறவினர் பெண்ணோடு திருமணம் செய்ய ஏற்பாடு நடந்து வந்தது.

    திருமண ஏற்பாடு நடந்ததால் சமீப காலமாக குடிப்பதை குறைத்து வந்துள்ளார். ஆனாலும், நேற்று நண்பருடன் குடிக்க சென்று கடைசியில் உயிரை பறி கொடுத்துள்ளார்.

    Next Story
    ×