search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி ஆட்சிக்கு கடைசிகாலம் நெருங்கி விட்டது- நாராயணசாமி ஆவேச பேச்சு
    X

    பிரதமர் மோடி ஆட்சிக்கு கடைசிகாலம் நெருங்கி விட்டது- நாராயணசாமி ஆவேச பேச்சு

    மோடி ஆட்சிக்கு கடைசிகாலம் நெருங்கி விட்டது என்று புதுவையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதல்- அமைச்சர் நாராயணசாமி பேசினார். #pmmodi #narayanasamy #congress

    புதுச்சேரி:

    ரபேல் விமான ஊழலை மறைக்க சி.பி.ஐ.துறை அதிகாரிகளை சுய லாபத்திற்காக மத்திய பா.ஜனதா மாற்றி உள்ளதாக கூறி நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    அதுபோல் புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் தலைமை தபால்நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.

    முதல்- அமைச்சர் நாராயணசாமி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், புதுவை பொறுப் பாளருமான சஞ்சய்தத் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் முதல்- அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    டெல்லியில் ராகுல்காந்தி சி.பி.ஐ. அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தி கொண்டிருக்கிறார். ஊழலை ஒழிப்பேன் எனக்கூறி மோடி ஆட்சிக்கு வந்தார்.

    ஆனால், பா.ஜனதா ஆளும் அனைத்து மாநிலங்களிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. ராஜஸ்தானில் நிலக்கரி ஊழல், மத்திய பிரதேசத்தில் டாக்டர் நியமனத்தில் ஊழல், சத்தீஸ்கரில் அரிசி வாங்கியதில் ஊழல் என பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் நடைபெறும் ஊழலை காங்கிரஸ் கட்சி ஆதாரத்தோடு எடுத்துக்கூறி வருகிறது.

    தமிழகத்தில் முதல்- அமைச்சர் மீது சி.பி.ஐ. விசாரணை நடக்கிறது. அமைச்சர்களின் வீடுகளில் சோதனைகள் நடக்கிறது.

    எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை பா.ஜனதா முடக்குகிறது, கண் காணிக்கிறது. ஆனால் பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் நடைபெறும் ஊழலை கண்டும், காணாமலும் உள்ளது.

    இதைத்தான் ராகுல்காந்தி பாராளுமன்றத்தில் கேட்டார். பல மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்தும் கேள்வி எழுப்பி வருகிறார். ஆனால், மோடி இவை எதற்கும் பதில் கூறவில்லை.

    ஊழலை ஒழிப்பேன் என சொன்ன மோடி ஊழலுக்கு உறுதுணையாக உள்ளார். மோடிக்கு கடைசிகாலம் நெருங்கிவிட்டது. இன்னும் 5 மாதங்களில் மோடியின் ஆட்சி வீட்டிற்கு போகும். நாம் மோடியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும். அதற்கு உறக்க மின்றி நாம் பணியாற்ற வேண்டும்.


    புதுவையின் பாராளு மன்ற வேட்பாளரை வெற்றி பெறச்செய்ய வேண்டும். ராகுல்காந்தியை பிரதமராக்க புதுவை எம்.பி. கை கொடுக்க வேண்டும். இதற்காக காங்கிரஸ் தொண்டர்கள் பாடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    போராட்டத்தில் அமைச்சர் ஷாஜகான், துணை சபாநாயகர் சிவக் கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் பாலன், விஜயவேணி, தனவேலு, டெல்லி பிரதிநிதி ஜான்குமார், காங்கிரஸ் துணைத்தலைவர்கள் விநாயகமூர்த்தி, நீல. கங்காதரன், பொதுச் செயலாளர்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கருணாநிதி, தனுசு, ஐ.என்.டி.யூ.சி. மாநில தலைவர் ரவிச்சந்திரன்,

    இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமேஷ், பொதுச் செயலாளர் விக்னேஷ், மாணவர் காங்கிரஸ் தலைவர் கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் விக்கிர மாதித்தன், மகிளா காங்கிரஸ் தலைவி பிரேமலதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய பா.ஜனதா அரசுக்கு எதிராகவும், மோடிக்கு எதிராகவும் கோ‌ஷம் எழுப்பினர். #pmmodi #narayanasamy #congress

    Next Story
    ×