search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் - ராஜகண்ணப்பன் பேச்சு
    X

    எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் - ராஜகண்ணப்பன் பேச்சு

    எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் என்று அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் ராஜகண்ணப்பன் பேசினார்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூரில் அ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் அங்குள்ள அண்ணாசிலை அருகே நடைபெற்றது. சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். சிவகங்கை, ராமநாதபுரம் ஆவின் சேர்மன் அசோகன், ஒன்றியச் செயலாளர் ராமலிங்கம், துணைச் செயலாளர் முருகேசன், முன்னாள் ஒன்றியக்குழுத்தலைவர் கரு.சிதம்பரம், பேரவை வெற்றிச் செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், தற்போதைய அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான ராஜகண்ணப்பன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- 1991-96-ல் என்னுடைய அரசியல் வாழ்க்கையில் அமைச்சர், கட்சியின் பொருளாளர் என பெரிய பொறுப்புகளை வழங்கியது திருப்பத்தூர் தொகுதி. உள்ளாட்சி தேர்தலை நாம் நடத்தவில்லை என்பது உண்மை. காரணம் அன்று கட்சியில் சில பிரச்சினைகள் வந்தது, இன்றைக்கு முடிந்துவிட்டது. வருகிற பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெறும்.

    12 நாடுகளில் சொத்துக்கள் வாங்கிய நபர்கள் ப.சிதம்பரமும், அவரது மகனும் தான் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. பா.ஜ.க.வுடன் எங்களுக்கு உறவும் கிடையாது. கூட்டணியும் கிடையாது. காங்கிரஸ் கட்சிக்கு ஆட்களோ, தொண்டர்களோ கிடையாது. தற்போது காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக, பல்வேறு கட்சிகளுக்கு சென்று வந்த திருநாவுக்கரசார் இருக்கிறார். ஆனால் அந்த கட்சியில் 9 தலைவர்கள் உள்ளனர்.

    அ.தி.மு.க.வில் யாரும் தலைவர்கள் கிடையாது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அமைச்சர்கள், நான், மாவட்ட செயலாளர்கள் யாராக இருந்தாலும் அனைவரும் தொண்டர்கள் தான். சில அதிகாரிகள் செய்கின்ற தவறுகளால் அ.தி.மு.க. ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படலாம். எந்த தேர்தல் வந்தாலும், அ.தி.மு.க. வெற்றியை பெறும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் திரைப்பட நடிகர் சிங்கமுத்து, நெற்குப்பை முன்னாள் பேரூராட்சித் தலைவர் சஞ்சீவி, முன்னாள் நகர துணைச் செயலாளர் பிரேம்குமார், முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் சின்னையா அம்பலம் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகரச் செயலாளர் இப்ராம்ஷா நன்றி கூறினார்.
    Next Story
    ×