search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிகாரிகளை பழிவாங்க ரெயிலை கவிழ்க்க முயன்ற 3 ஊழியர்கள் கைது
    X

    அதிகாரிகளை பழிவாங்க ரெயிலை கவிழ்க்க முயன்ற 3 ஊழியர்கள் கைது

    தொடர் பணிச்சுமையால் அதிகாரிகளை பழிவாங்க ரெயிலை கவிழ்க்க முயன்ற 3 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

    சேலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்து கடந்த 19-ந் தேதி மதியம் 2 மணி அளவில் பயணிகள் ரெயில் சேலத்துக்கு புறப்பட்டு வந்தது. அந்த ரெயில் மதியம் 2.20 மணியளவில் கூத்தக்குடி ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டு இருந்தது.

    அப்போது தண்டவாளத்தில் நீண்ட வரிசையில் இரும்பு கம்பிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை பார்த்த ரெயில் என்ஜின் டிரைவர் உடனே ரெயிலை நிறுத்தினார். தண்டவாளத்தில் நாசவேலை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    தண்டவாளத்தின் அடியில் உள்ள சிமெண்டு கட்டையுடன் இணைக்கும் 15-க்கும் மேற்பட்ட இரும்பு ‘கிளிப்’புகளை யாரோ ? உடைத்து தண்டவாளத்தின் மீது வைத்திருந்தனர்.

    இது குறித்து அவர் கூத்தக்குடி ரெயில் நிலையத்துக்கும், ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரெயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தை சீரமைத்தனர். அதன்பிறகு மாலை 4.20 மணி அளவில் பயணிகள் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சேலத்தை நோக்கி வந்தது.

    இந்த சம்பவம் குறித்து சேலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகள் ரெயிலை கவிழ்ப்பதற்காக நாசவேலையில் ஈடுபட்டார்களா? அல்லது குடிபோதையில் இந்த செயலில் ஈடுபட்டார்களா? என விசாரணை நடத்தினர். அப்போது ரெயில் நிலைய ஊழியர்கள் 3 பேர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்கள் மீது சந்தேகம் எழுந்தது.

    அதன் அடிப்படையில் கூத்தக்குடி ரெயில் நிலையத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் மகேந்திரன் (வயது 36), மணிவேல் (32) ரகுராமன் (40) ஆகிய 3 பேரையும் பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

    அப்போது தொடர்ந்து பணி வழங்கியதால் பணி சுமையால் 3 பேரும் தவித்ததாகவும், அதற்காக ரெயில்வே அதிகாரிகளை பழி வாங்கும் நோக்கில் கிளிப்புகளை கழற்றியதாகவும் தெரிவித்தனர்.

    இதனால் அதிகாரிகளை பழிவாங்க ரெயிலை கவிழ்க்கும் செயலில் ஊழியர்கள் 3 பேரும் ஈடுபட்டது தெரியவந்தது. இது தொடர்பாக துறை ரீதியான விசாரணையும் நடைபெற்று வருகிறது. இதனால் 3 பேரும் சஸ்பெண்டு செய்யப்படுவார்கள் என ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    Next Story
    ×