search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகிரி அருகே மின்வாரிய பெண் ஊழியர் கொலை: கணவர்-மாமியார் கைது
    X

    சிவகிரி அருகே மின்வாரிய பெண் ஊழியர் கொலை: கணவர்-மாமியார் கைது

    சிவகிரி அருகே மின்வாரிய பெண் ஊழியர் கொலையில் கணவர், மாமியார் கைது செய்யப்பட்டனர்.
    சிவகிரி:

    சிவகிரியை அடுத்த பழமங்கலம் அருகே உள்ள காட்டூரை சேர்ந்தவர் தமிழ்மணி (வயது 45). விவசாயி. இவருக்கும் கொடுமுடி கருத்தி பாளையத்தை சேர்ந்த தங்கவேல் என்பவரின் மகள் ஜோதிமணி (35) என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள எல்லப்பாளையம் மின்வாரிய அலுவலகத்தில் ஜோதிமணி அலுவலக உதவியாளராக வேலை செய்து வந்தார்.

    தமிழ்மணியும், ஜோதிமணியும் ஒரு ஆண்டு ஒன்றாக வாழ்ந்தனர். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2 பேரும் தனித்தனியாக வசித்தனர்.

    இந்த நிலையில் ஜோதிமணியிடம் இருந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டில் தமிழ்மணி வழக்கு தாக்கல் செய்தார். ஆனால் விவாகரத்துக்கு ஜோதிமணி சம்மதிக்கவில்லை என தெரிகிறது. இந்த வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இது தொடர்பாக 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினமும் அவர்கள் தகராறில் ஈடுபட்டனர்.

    அப்போது தமிழ்மணிக்கு ஆதரவாக தமிழ்மணியின் தாய் பழனியம்மாள் (65) மற்றும் தமிழ்மணி நண்பரான சிவகிரி அருகே உள்ள கனக்கம்பாளையத்தை சேர்ந்த லோகநாதன் ஆகியோர் பேசினர்.

    இதனால் தகராறு முற்றியது. ஆத்திரம் அடைந்த தமிழ்மணி, பழனியம்மாள், லோகநாதன் ஆகியோர் சேர்ந்து உருட்டு கட்டையால் ஜோதிமணியை தாக்கினர்.

    இதில் சம்பவ இடத்திலேயே ஜோதிமணி பரிதாபமாக இறந்தார். அதன்பின்னர் தமிழ்மணி, பழனியம்மாள், லோகநாதன் ஆகிய 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இது குறித்த புகாரின் பேரில் சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து தமிழ் மணி, பழனியம்மாள், லோகநாதன் ஆகியோரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் பழனியம்மாளை போலீசார் கைது செய்தனர். இதேபோல சிவகிரி அருகே விளக்கேத்தியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது தமிழ் மணி கைதானார்.

    அவரது நண்பரான லோகநாதன் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×