search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரக்காணம் அருகே ஏரியில் மூழ்கி 2 மாணவிகள் உயிரிழப்பு
    X

    மரக்காணம் அருகே ஏரியில் மூழ்கி 2 மாணவிகள் உயிரிழப்பு

    மரக்காணம் அருகே ஏரியில் மூழ்கி மாணவிகள் 2 பேர் பலியான சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள முன்னூர் கிராமத்தை சேர்ந்தவர் மார்க். இவரது மகள் எழிலரசி(வயது 14). இவர் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    அதே பகுதியை சேர்ந்தவர் ரங்கசன் மகள் ரித்தியா(11). இவரும் அதே பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். இன்று பள்ளி விடுமுறை என்பதால் எழிலரசி, ரித்தியா மற்றும் அவர்களது தோழிகளான நந்தினி, கோமதி ஆகிய 4 பேரும் முன்னூரில் இருந்து தலைவாணிக்குப்பம் செல்லும் சாலையில் உள்ள ஏரிக்கு குளிக்க சென்றனர்.

    பின்னர் 4 பேரும் ஏரிக்கரையில் நின்று குளித்து கொண்டு இருந்தனர். அப்போது எழிலரசி மற்றும் ரித்தியா ஆகியோர் ஏரியின் நடுப்பகுதிக்கு சென்றனர்.

    அங்கு தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் அவர்கள் 2 பேரும் தண்ணீரில் தத்தளித்தனர்.

    கரைக்கு திரும்ப முயன்றனர். ஆனால் முடியவில்லை. காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று கூக்குரலிட்டனர். சிறிது நேரத்தில் அவர்கள் 2 பேரும் தண்ணீரில் மூழ்கினர்.

    இதைபார்த்த அவர்களது தோழிகள் நந்தினி, கோமதி அதிர்ச்சி அடைந்தனர். உடனே ஏரியை விட்டு வெளியே சென்று பொதுமக்களை அழைத்து வந்தனர்.

    அவர்கள் ஏரிக்குள் குதித்து 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முருக்கேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு எழிலரசி, ரித்தியாவை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    எழிலரசி, ரித்தியாவின் உடலை பார்த்து அவர்களது பெற்றோர் கதறி அழுதனர்.

    இதுகுறித்து பிரம்ம தேசம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏரியில் மூழ்கி மாணவிகள் 2 பேர் பலியான சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×