search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இளம்பெண்ணை கிண்டல் செய்ததால் தகராறு: பெண் குத்திக்கொலை - 3 வாலிபர்கள் கைது
    X

    இளம்பெண்ணை கிண்டல் செய்ததால் தகராறு: பெண் குத்திக்கொலை - 3 வாலிபர்கள் கைது

    இளம்பெண்ணை கிண்டல் செய்ததால் ஏற்பட்ட தகராறில், பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ராயபுரம்:

    ராயபுரம் செட்டிதோட்டம் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார். இவருடைய மனைவி பரமேஸ்வரி.

    இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகள் இருக்கிறார். அவரை பக்கத்து வீட்டில் வசிக்கும் வாலிபர் வினோத்குமார் (26) கிண்டல் செய்தார். இது குறித்து பரமேஸ்வரி ராயபுரம் போலீசில் புகார் செய்தார்.

    இதையடுத்து, ராயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராபர்ட், இளம் பெண்ணை கிண்டல் செய்த வாலிபர் வினோத்குமாரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று கண்டித்தார். இதனால் அவர் ஆத்திரம் அடைந்தார்.

    வேலைக்கு சென்றிருந்த பரமேஸ்வரியின் கணவர் பிரேம்குமார் இரவு வீடு திரும்பினார். அப்போது தனது மகளை பக்கத்து வீட்டு வாலிபர் கிண்டல் செய்தது பற்றி தெரியவந்தது. எனவே, வினோத்குமார் வீட்டுக்கு சென்று அவரை கண்டித்தார்.

    அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், மேலும் ஆத்திரம் அடைந்த வினோத் குமார் பிரேம்குமாரை அடித்து உதைத்தார்.

    இதுபற்றி பிரேம்குமார் தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். இரவோடு இரவாக அனைவரும் பிரேம்குமார் வீட்டுக்கு வந்தனர்.

    அவர்கள் அருகில் உள்ள வினோத்குமார் வீட்டுக்கு சென்று அவரை கண்டித்தனர். அப்போது, மீண்டும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இந்த நிலையில் வினோத்குமார் கத்தியை எடுத்து வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிரேம்குமார் உறவினர் மேரி (40) என்பவரை கத்தியால் குத்தினார். இதை தடுக்க முயன்ற மேரியின் தங்கை மெர்லின், பிரேம்குமார் ஆகியோர் காயம் அடைந்தனர்.

    படுகாயம் அடைந்த அவரை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேரி பரிதாபமாக இறந்தார்.

    ராயபுரம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து வாலிபர் வினோத்குமார், அவருடைய தம்பி தமிழ் (23), உறவினர் சங்கர் (28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இளம்பெண்ணை கிண்டல் செய்ததால் ஏற்பட்ட தகராறில், பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    காயம் அடைந்த மெர்லின், பிரேம்குமார் ஆகியோருக்கு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    Next Story
    ×