search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் போலீஸ் அதிகாரி மனைவியை கிண்டல் செய்த 6 பேர் கைது
    X

    புதுவையில் போலீஸ் அதிகாரி மனைவியை கிண்டல் செய்த 6 பேர் கைது

    கடற்கரை சாலையில் வாக்கிங் சென்ற போலீஸ் அதிகாரி மனைவியை கிண்டல் செய்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருபவர் ஆல்வா. இவரது குடும்பத்தினர் புதுவை காவல் துறை தலைமை அலுவலகம் அருகே வசித்து வருகின்றனர்.

    நேற்று இரவு சீனியர் போலீஸ் சூப்பிரண்டின் மனைவி கடற்கரை சாலையில் நடைபயிற்சி சென்று கொண்டு இருந்தார்.

    டூப்ளே சிலை அருகே சென்ற போது, அவரை குடிபோதையில் இருந்த 6 பேர் கொண்ட கும்பல் கிண்டல் செய்தது. மேலும் அத்து மீறலிலும் ஈடுபட முயன்றனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் புதுவை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தாவுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார்.

    அவர் இதுபற்றி பெரிய கடை மற்றும் ஒதியஞ்சாலை, உருளையன் பேட்டை போலீசாருக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

    இதையடுத்து போலீஸ் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட 6 பேர் கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள் ஆட்டோ டிரைவர்களான பிரபு (37), பிரகாஷ் (31), பாரதி (36), சதீஷ் (34) மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த வினித்கவுர் (32), லூயி (37) என்பதும், ஆயுத பூஜை கொண்டாட்டத்தில் உற்சாக மிகுதியில் மது குடித்து விட்டு போலீஸ் அதிகாரி மனைவியிடம் அத்து மீறலில் ஈடுபட முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×