search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயிலில் இருந்து செல்போனில் வியாபாரியை மிரட்டிய ரவுடி பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றம்
    X

    ஜெயிலில் இருந்து செல்போனில் வியாபாரியை மிரட்டிய ரவுடி பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றம்

    வேலூர் ஜெயிலில் இருந்து செல்போனில் வியாபாரியை மிரட்டிய ரவுடி தியாகராஜன் பாளையங்கோட்டை ஜெயிலுக்கு இன்று மாற்றப்பட்டார்.
    வேலூர்:

    காஞ்சிபுரம் பொய்யாங்குளத்தை சேர்ந்தவர் தியாகு என்கிற தியாகராஜன். பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

    கடந்த ஏப்ரல் மாதம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தியாகராஜன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    சின்ன காஞ்சீபுரத்தில் உள்ள யதோகதகாரி கோவிலுக்கு சொந்தமான இடம் காஞ்சீபுரம் ரங்கசாமி குளம் பகுதியில் உள்ளது. இதில் ஏராளமானோர் கடை வைத்துள்ளனர்.

    இதில் அதே பகுதியைச் சேர்ந்த ரகுநாதன் (43) என்பவர் கடை வைத்திருந்தார். அவர் வாடகை பாக்கி வைத்திருந்ததாக தெரிகிறது.

    இதற்கிடையே கோவில் தர்மகர்த்தா நாராயணன் என்பவர் வாடகை பாக்கி வைத்திருந்த வியாபாரிகளை கடைகளை காலி செய்யுமாறு கூறினார்.

    இதற்காக ரவுடி தியாகராஜனின் உதவியை நாடினார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவில் தர்ம கர்த்தா நாராயணன் மற்றும் காஞ்சீபுரம் ரவுடி தியாகராஜனின் தாய் பவானி ஆகியோர் கடைக்கு சென்று ரகுநாதனை மிரட்டினர். அப்போது செல்போனில் தொடர்பு கொண்டு ரவுடி தியாகராஜன் ரகுநாதனுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

    இதுபற்றி நேற்று முன்தினம் சின்ன காஞ்சீபுரம் போலீஸ் நிலையத்தில் ரகுநாதன் புகார் அளித்தார். இதன் பின்னர் ஆட்டோவில் வீடு திரும்பிய ரகு நாதனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரை காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சின்ன காஞ்சீபுரம் போலீசார் கோவில் தர்மகர்த்தா நாராயணனை 2 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

    போலீஸ் விசாரணையில் ரகுநாதனை வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி தியாகராஜன் மிரட்டியது தெரியவந்தது. இது குறித்து வேலூர் பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து தியாகராஜன் அடைக்கப்பட்டுள்ள அறையில் அதிரடி சோதனை நடத்த போலீசார் முடிவு செய்தனர். நேற்று நள்ளிரவு பாகாயம் போலீசார் ஜெயிலுக்குள் சென்று தியாகராஜன் அறையில் சோதனை செய்தனர். அங்கிருந்து ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த போனில் இருந்து தான் வியாபாரியை மிரட்டியுள்ளார். இதனையடுத்து அவர் மீது பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து ரவுடி தியாகராஜன் பாளையங்கோட்டை ஜெயிலுக்கு இன்று மாற்றப்பட்டார்.

    Next Story
    ×