search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தல்: கமல்-காங். தலைமையில் புது கூட்டணி உருவாக வாய்ப்பு
    X

    பாராளுமன்ற தேர்தல்: கமல்-காங். தலைமையில் புது கூட்டணி உருவாக வாய்ப்பு

    2019-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட தயார் என கமல்ஹாசன் தெரிவித்துள்ள நிலையில் இவர்கள் தலைமையில் புதிய கூட்டணி உருவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #KamalHaasan #Congress
    சென்னை:

    நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்தபோது மிகப்பெரிய ஆதரவு அலை எதுவும் உருவாகவில்லை.

    அவர்கள் இருவருக்கும் “பூத் கமிட்டி” வரை உள் கட்டமைப்பு வலுவாக இல்லாமல் இருந்ததே அந்த எழுச்சி அலை உருவாகாமல் போனதற்கு காரணமாக கருதப்பட்டது.

    இதை உணர்ந்த ரஜினி, கமல் இருவரும் கடந்த சில மாதங்களாக உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்தினார்கள். உரிய நிர்வாகிகளை நியமித்தனர். இதன் மூலம் ரஜினி, கமல் இருவரது கட்சிகளும் சமீப காலமாக ஓசையின்றி வலுவாகத் தொடங்கியுள்ளன.

    அதிலும் கமல்ஹாசன், “மக்கள் நீதி மய்யம்“ என்று தன் கட்சிக்கு பெயர் சூட்டி, மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணத்தை தொடங்கி விட்டபிறகு பொதுமக்கள் அவரை உற்று நோக்க ஆரம்பித்து விட்டனர். மாவட்ட சுற்றுப் பயணங்களின்போது கமல்ஹாசன் சொல்லும் கருத்துக்கள் மக்களை மிகவும் கவர்கின்றன.

    வழக்கமான அரசியல்வாதி போல அல்லாமல் மாறுபட்ட கோணத்தில் அவர் சிந்திப்பதையும், பேசுவதையும் இளம் வாக்காளர்கள் வரவேற்கிறார்கள். இதனால் தமிழக அரசியல் களத்தில் நடிகர் கமல்ஹாசன் கொஞ்சம், கொஞ்சமாக வலுப்பெற்று வருகிறார்.

    ரஜினியும் கமலும் அரசியலுக்கு வரப் போவதாக அறிவித்தபோது அவர்கள் கட்சி தனித்துப் போட்டியிடும் என்றே கருதப்பட்டது. ஆனால் அவர்கள் தனித்துப் போட்டியிட்டு ஆட்சியை பிடிப்பதற்கான தமிழக சட்டசபை தேர்தல் இப்போதைக்கு வரும் சூழ்நிலை இல்லை.

    அதற்கு மாறாக கமல், ரஜினி இருவருமே முதன் முதலாக பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் தேசியக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதே சிறந்தது என்ற நிலை உருவாகி இருப்பதால் ரஜினி, கமல் இருவரும் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பார்கள் என்பது உறுதியாகியுள்ளது.

    கூட்டணி வி‌ஷயத்தில் முதல் அதிரடியை கமல்ஹாசன் ஆரம்பித்துள்ளார். கடந்த வாரம் தந்தி தொலைக்காட்சிக்கு கமல்ஹாசன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “2019-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட தயார்” என்று தெரிவித்தார்.

    இது தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்களிடம் மட்டுமின்றி அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு அந்த தலைவர்களிடம் கூட்டணி மாற்றத்துக்கான விதையையும் ஆழமாக ஊன்றியுள்ளது.

    2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை வாழ்வா, சாவா என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி எதிர்கொள்ளத் தொடங்கி உள்ளது. அந்த கட்சிக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஒவ்வொரு தொகுதியும் முக்கியமானதாகும். அந்த வகையில் தென் இந்தியாவிலும் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி விரும்புகிறார்.

    கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் இந்த தடவை கணிசமான தொகுதிகளை பெற முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கும் அவர் தமிழ் நாட்டில் இருந்தும் அதிக தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்று நினைக்கிறார். தமிழ்நாட்டில் தற்போது தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது. ஆனால் பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் தாங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு தொகுதிகளை தி.மு.க. விட்டுத் தருமா? என்ற சந்தேகம் காங்கிரஸ் தலைவர்களிடம் உள்ளது.

    இந்த நிலையில்தான் காங்கிரஸ் கட்சியை நோக்கி சில முக்கிய கட்சிகள் வரத் தொடங்கி உள்ளன. 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது உத்தரபிரதேசத்தில் உள்ள எல்லா சிறிய கட்சிகளும் பா.ஜ.க.வை நோக்கி ஓடி வந்து ஒட்டிக் கொண்டன. அந்த தேர்தலில் உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க. மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 72 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தது.

    அதே போன்ற அரசியல் நகர்வுதான் தற்போது தமிழக காங்கிரஸ் கட்சிக்கு உருவாகி இருப்பதாக அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். தமிழ்நாட்டில் 51 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சியை பறி கொடுத்த காங்கிரஸ் கட்சிக்கு இப்போது ஏற்பட்டுள்ள மாற்றம் மிக, மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. குறிப்பாக தி.மு.க.வை விட்டு விலகும் பட்சத்தில் காங்கிரஸ் தலைமையில் மிகப்பெரிய வலுவான கூட்டணி உருவாக வாய்ப்பு தோன்றியுள்ளது.

    காங்கிரசுடன் கூட்டணி “கை”கோர்க்க தயார் என்று கமல்ஹாசன் சொல்வதற்கு முன்பே அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டி.டி.வி.தினகரன் காங்கிரசுடன் கூட்டணி சேர தயாராகி விட்டார். பா.ஜ.க.வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அவர் காங்கிரசுடன் கூட்டணி சேர ஏற்கனவே ரகசிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்று காங்கிரஸ் மேலிடம் அறிவித்தால், டி.டி.வி. தினகரன்தான் முதல் ஆளாக சென்று காங்கிரசுடன் கூட்டணி அமைப்பார் என்கிறார்கள்.

    தமிழக காங்கிரஸ் தலைவராக இருக்கும் திருநாவுக்கரசரும் இதைத்தான் விரும்புவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. டி.டி.வி.தினகரனை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் காங்கிரஸ் மேலிடத்தில் ஏற்கனவே கூறியுள்ளார். அ.தி.மு.க. தொண்டர்களில் கணிசமானவர்கள் டி.டி.வி. தினகரன் பக்கம் இருப்பதால் காங்கிரஸ் மேலிடமும் அவரை ஏற்கும் என்றே சொல்கிறார்கள்.

    அடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில்தான் இருப்பேன் என்று ஏற்கனவே தெள்ளத் தெளிவாக உறுதிபட கூறியுள்ளார். கடந்த மே மாதம் அவர் இதுபற்றி கூறுகையில், “காங்கிரஸ் இல்லாமல் மூன்றாவது அணி வெற்றி பெறாது. எனவே காங்கிரஸ் தலைமையில் வலுவான கூட்டணியை உருவாக்குவோம்“ என்றார்.

    இதன் மூலம் காங்கிரஸ் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 100 சதவீதம் இடம் பெறும் என்பது உறுதியாகி விட்டது. இந்த நிலையில் மேலும் சில முக்கிய கட்சிகளையும் காங்கிரஸ் கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சிகளில் தொல். திருமாவளவன் ஈடுபட்டுள்ளார். அவர் உதவியால் இடது சாரிகள், முஸ்லிம் லீக், கொங்கு மண்டல கட்சிகளும் காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற வாய்ப்பு உள்ளது.

    இதற்கிடையே பாட்டாளி மக்கள் கட்சியையும் காங்கிரஸ் கூட்டணியில் இணைய செய்ய ரகசிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. காடுவெட்டி குரு மரணம் அடைந்தபோது காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்து இருந்தார். அதன் பிறகு காங்கிரஸ் கட்சிக்கும், பாட்டாளி மக்கள் கட்சிக்கும் ஒருமித்த கருத்து உருவாகி உள்ளது.

    அ.தி.மு.க., பா.ஜ.க.வுக்கு எதிராக பா.ம.க. தொடர்ந்து மிகக்கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது. எனவே வரும் தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க பா.ம.க.வில் ஆதரவு அதிகரித்துள்ளது.



    ராகுல்காந்தி தாமாக முன்வந்து பா.ம.க. தலைவர் ராமதாஸ் மற்றும் அன்புமணியுடன் பேச்சு நடத்தும் பட்சத்தில் பா.ம.க.வும் காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்று விடும் என்று கூறப்படுகிறது. விடுதலை சிறுத்தைகளும், பா.ம.க.வும் ஒரே அணியில் எப்படி அங்கம் வகிக்கும் என்ற சந்தேகம் அரசியல் வட்டாரத்தில் எழ வாய்ப்பு உள்ளது.

    ஆனால் பாராளுமன்ற தேர்தல் என்பதால் தொகுதி பங்கீடு அடிப்படையில் இதை சமாளித்து விடலாம் என்று காங்கிரஸ் தலைவர்கள் சிலர் மேலிடத்துக்கு ஆலோசனை தெரிவித்துள்ளனர். எனவே காங்கிரஸ் மெகா கூட்டணியில் பா.ம.க. இடம் பெற வாய்ப்பு அதிகரித்துள்ளது.

    காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் சேரும்போது அந்த கூட்டணி இதுவரை இல்லாத அளவுக்கு உண்மையான மெகா கூட்டணியாக மாறும் என்று அரசியல் வட்டாரத்தில் கருதப்படுகிறது.

    தொகுதி பங்கீடு மட்டுமே இந்த கூட்டணியில் சவாலாக அமையும். ஆனால் சில கட்சிகள் விட்டு கொடுக்கும் பட்சத்தில் அதுவும் எளிதாகி விடும்.

    இப்படி ஒரு சூழ்நிலை அமையும் பட்சத்தில் இந்த கூட்டணி தமிழக அரசியல் களத்தையே மாற்றும் கூட்டணியாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    காங்கிரஸ் கட்சியுடன் கமல்ஹாசனின் “மக்கள் நீதி மய்யம்” கூட்டணி அமைக்கும் பட்சத்தில் நடிகர் ரஜினியின் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் கிளம்பும். ரஜினி ஏற்கனவே ஆன்மீக அரசியலை விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

    எனவே அவர் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் இடம் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பா.ஜ.க. கூட்டணியில் தி.மு.க. அல்லது அ.தி.மு.க. சேருவதை பொறுத்து ரஜினி முடிவில் மாற்றம் ஏற்படலாம் என்று சொல்கிறார்கள். இந்த சிக்கலில் இருந்து தப்பிக்க அவர் புதிய கட்சி தொடங்குவதை அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கக்கூடும் என்று சொல்கிறார்கள்.

    அதற்கு முன்னதாக கட்சி தொடங்கி விட்டால், அவர் பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணியில் ஐக்கியமாகவே அதிக வாய்ப்புள்ளது.

    இந்த கூட்டணி மாற்றங்களால் தி.மு.க. தனித்து விடப்படலாம். இத்தகைய சூழ்நிலை உருவானால் நடிகர் விஜய் புதிய கட்சியைத் தொடங்கி தி.மு.க.வுக்கு ஆதரவாக களம் இறங்கக் கூடும் என்று ஒரு பேச்சு எழுந்துள்ளது. #KamalHaasan #Congress
    Next Story
    ×