search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகம் முழுவதும் இறுதிகட்டமாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க சிறப்பு முகாம்
    X

    தமிழகம் முழுவதும் இறுதிகட்டமாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க சிறப்பு முகாம்

    தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குவதற்கான சிறப்பு முகாம் இறுதி கட்டமாக நேற்று நடந்தது. சென்னையில் 3 ஆயிரத்து 754 மையங்களில் சிறப்பு முகாம் நடந்தது.
    சென்னை:

    சென்னையில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளுக்கு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை பொதுமக்கள் பார்வையிட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அந்த வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதோர், பெயர் சேர்க்க விரும்புவோர், திருத்தம் ஏதாவது செய்ய விரும்புவோர் மற்றும் தொகுதிக்குள்ளேயே இடமாற்றம் செய்ய விரும்புவோர் அதற்கான உரிய படிவங்களை பூர்த்தி செய்து, வருகிற 31-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் ஒரே தொகுதிக்குள் இடமாற்றம் ஆகியவற்றை மேற்கொள்வதற்கு பொதுமக்களுக்கு ஏதுவாக தமிழகம் முழுவதும் 4 கட்ட சிறப்பு முகாம்கள் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த மாதம் 9, 23 கடந்த 7 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

    இந்தநிலையில் 4-வது மற்றும் இறுதிகட்ட சிறப்பு முகாம் நேற்று தமிழகம் முழுவதும் உள்ள 67 ஆயிரத்து 644 வாக்குச்சாவடிகளில் நடந்தது. தலைநகர் சென்னையில் 3 ஆயிரத்து 754 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு-நீக்கல் முகாம் நடந்தது. இந்த முகாமில் வரும் ஜனவரி மாதம் 1-ந் தேதி அன்று 18 வயதை பூர்த்தி அடையக்கூடிய நபர்களும் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த முகாம் காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது.

    சிறப்பு முகாமில் 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள், பெயர் இல்லாதவர்கள் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து அளித்தனர். பெயர் நீக்கம் செய்ய படிவம் 7, முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தம் செய்ய படிவம் 8 மற்றும் ஒரே தொகுதிக்குள் இடம் மாறி இருந்தால் படிவம் 8-ஏ ஆகியவையும் முகாம்களில் வழங்கப்பட்டது.

    சென்னை அண்ணாநகர் மேற்கு வைகை காலனியில் உள்ள கிருஷ்ணசாமி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் நடந்த வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு-நீக்கம் முகாமை மண்டல மாநகராட்சி அதிகாரி பரந்தாமன் ஆய்வு செய்தார். மேலும் முகாமில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து அங்கிருக்கும் தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். இதுபோல ஆங்காங்கே நடந்த முகாம்களை தேர்தல் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இறுதி முகாம் என்பதால் நேற்று பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பிலும் பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் பங்கேற்க வரும் பொதுமக்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறதா? என்று சரிபார்ப்பு பணி நடந்தது.

    சிறப்பு முகாம்களில் பெற்ற பெயர் சேர்ப்பு, நீக்கல், திருத்தம் மற்றும் இடமாற்றம் தொடர்பாக பெறப்பட்ட படிவங்களை வருகிற 31-ந் தேதி வரை அனைத்து மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் விண்ணப்பிக்கலாம். இதைப்போல் www.elections.tn.gov.in மற்றும் nvsp.in ஆகிய ‘ஆன்-லைன்’ முகவரி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். 
    Next Story
    ×