search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குற்ற சம்பவங்களை தடுக்க திண்டிவனம் நேரு வீதியில் 50 கண்காணிப்பு கேமராக்கள்
    X

    குற்ற சம்பவங்களை தடுக்க திண்டிவனம் நேரு வீதியில் 50 கண்காணிப்பு கேமராக்கள்

    திண்டிவனம் நேரு வீதியில் புதிதாக பொருத்தப்பட்ட 50 கண்காணிப்பு கேமராக்களை அமைச்சர் சி.வி.சண்முகம் இயக்கி வைத்தார்.
    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் திண்டிவனம் நேரு வீதியில் ரூ.13 லட்சம் செலவில் 50 இடங்களில் புதிதாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதற்கான கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது. இதையடுத்து புதிதாக அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, திண்டிவனம் சப்-கலெக்டர் மெர்சி ரம்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் வரவேற்றார்.



    சிறப்பு அழைப்பாளராக சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு நேரு வீதியில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி இயக்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், திண்டிவனம் நகரில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் காவல்துறை சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. வணிக வளாகங்கள், கடைகள் அதிகளவில் உள்ள நேரு வீதியில் தற்போது கூடுதலாக 50 இடங்களில் புதிதாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் திண்டிவனம் நகர முக்கிய சாலைகளில் ரூ.15 லட்சம் செலவில் 70 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் ராஜேந்திரன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சீத்தாபதி சொக்கலிங்கம், டாக்டர் மாசிலாமணி, அ.தி.மு.க. நகர செயலாளர் வக்கீல் தீனதயாளன், ஒலக்கூர் ஒன்றிய செயலாளர்கள் கிழக்கு எஸ்.பி.ராஜேந்திரன், மேற்கு கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஒலக்கூர் ஒன்றிய செயலாளர் பன்னீர், ஒப்பந்ததாரர்கள் சுப்பிரமணியன், டி.கே. குமார் மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். திண்டிவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிபாபு நன்றி கூறினார்.
    Next Story
    ×