search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பால் வியாபாரி கொலை வழக்கு - வாலிபருக்கு ஆயுள் தண்டனை
    X

    பால் வியாபாரி கொலை வழக்கு - வாலிபருக்கு ஆயுள் தண்டனை

    பால் வியாபாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வெண்ணந்தூர் தங்கசாலை வீதியை சேர்ந்தவர் செல்வராஜ். விசைத்தறிக்கூடம் வைத்து நடத்தி வருகிறார். இவரது 2-வது மகன் ராமன் (வயது 23). தந்தை நடத்தி வந்த தறித்தொழிலை ராமன் கவனித்து வந்தார்.

    இவர் வெண்ணந்தூரை சேர்ந்த ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்தார். ஆனால் அந்த பெண் வெண்ணந்தூர் அருகே உள்ள நாச்சிப்பட்டி செட்டிக்காட்டை சேர்ந்த பால் வியாபாரி சக்திவேலை (27) காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராமன், கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ந் தேதி இரவு வெண்ணந்தூர் துளக்கன்காட்டில் தனியார் விவசாய நிலத்தில் சக்திவேலின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

    இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட அப்போதைய வெண்ணந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமன் மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர். இந்த கொலை வழக்கு ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து விசாரணைக்காக நாமக்கல் மகளிர் கோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுசீலா ஆஜராகி வாதாடினார்.

    சக்திவேல் கொலை வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராமனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி இளங்கோ தீர்ப்பு கூறினார். அபராதத்தை செலுத்த தவறினால் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

    குற்றம் சாட்டப்பட்ட 17 வயது சிறுவனை நீதிபதி விடுதலை செய்தார். இதையடுத்து ராமனை கோவை சிறைக்கு அழைத்து செல்ல போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
    Next Story
    ×