search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிளாஸ்டிக் தடையால் வியாபாரிகளுக்கு பாதிப்பு- திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவதே நிரந்தர தீர்வு
    X

    பிளாஸ்டிக் தடையால் வியாபாரிகளுக்கு பாதிப்பு- திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவதே நிரந்தர தீர்வு

    பிளாஸ்டிக் பிரச்சினையை சீரமைக்க தடை என்பது நிரந்தரத் தீர்வாகாது என்றும் அதற்கு மாற்றாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தினால் நிரந்தர தீர்வு காண முடியும் எனவும் வணிகர் பேரமைப்பு மாநில தலைவர் கூறினார்.
    ஈரோடு:

    தமிழ்நாடு வணிகர் பேரமைப்பு மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் நடந்தது.

    கூட்டத்துக்கு தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இணைச்செயலாளர் சிவனேசன் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது,-

    தமிழக அரசு வரும் ஜனவரி மாதம் முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப் போவதாக அறிவித்துள்ளது. இந்த விதிகளில் கூறப்பட்டுள்ள குறிப்புகளை கவனித்தால் சிறு மற்றும் குறு வியாபாரிகளுக்கு பொருள் பேக்கிங் செய்யவும் விற்பனை செய்யவும் இந்த அறிவிப்பு பாதகமாக உள்ளது.

    மையம் பன்னாட்டு நிறுவனங்கள் உற்பத்தி செய்து பேக்கிங் செய்யும் அனைத்து பொருட்களுக்கும் தடை இல்லை என்று அறிவித்துள்ளது. உதாரணமாக சிறு குறு மளிகை வியாபாரிகள் பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து சில்லறை வணிகத்திற்கு ஏற்றவாறு பேக்கிங் செய்து இதுவரை விற்பனை செய்து வருகின்றனர்.

    ஆனால் தற்போது தடை அறிவிப்பின்படி பொருட்களை மேற்கூறியவாறு பேக்கிங் செய்யவும் விற்பனை செய்ய முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர். இதனால் அவர்களது தொழில் மிகவும் பாதிக்கும் சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ளது.

    இது சிறு மற்றும் குறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் உள்ளது. இதுதவிர ஓட்டல் மற்றும் சிறு தயாரிப்பு நிறுவனங்கள், பேக்கரி நிறுவனங்கள், பொருட்களை பேக்கிங் செய்வதற்கு இதுவரை பிளாஸ்டிக் பொருளை உபயோகித்து வந்தனர். தற்போது இந்த தடையால் மாற்று பொருள் தெரியாமல் பேக்கிங் செய்ய சிரமத்திற்கு ஆளாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    இதனை தவிர்க்கும் வகையில் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்வதற்கான விழிப்புணர்வை தந்து மறுசுழர்ச்சிக்கு குப்பைகளை சேகரித்து பயன்படுத்தும் பொழுது குப்பைகளின் அளவும் முற்றிலும் குறையும்.

    அதேசமயம் மறுசுழற்சி நிறுவனங்களும் பெருகி நிறைய வேலை வாய்ப்புகளும் உண்டாகும். எனவே அரசு இதனை கருத்தில் கொண்டு மறுசுழற்சி நிறுவனங்களுக்கு ஏதுவான உதவிகளை செய்து அவர்கள் தொழில் முனைய வாய்ப்பு அளிக்க வேண்டும்.

    இந்த தடையால் பல கோடி வியாபாரிகளும் எங்களை போன்ற உற்பத்தியாளர்களும் பாதிப்படைவார்கள். மேலும் பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தவும் வழி வகுத்து விடும்.

    எனவே இந்த பிளாஸ்டிக் பிரச்சினையை சீரமைக்க தடை என்பது நிரந்தரத் தீர்வாகாது .அதற்கு மாற்றாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தினால் இந்த பிரச்சினைக்கு 100 சதவீதம் தீர்வு காண முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    செயற்குழு உறுப்பினர் ராமசாமி முன்னாள் தலைவர் வெங்கடாசலம் துணைத்தலைவர் ஜெப்ரி உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
    Next Story
    ×