search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாதவரம் அடுக்குமாடி பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதல்வர்
    X

    மாதவரம் அடுக்குமாடி பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதல்வர்

    சென்னை மாதவரத்தில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி பேருந்து நிலையத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். #EdappadiPalaniswami #MadhavaramBusTerminus
    சென்னை:

    சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    இதை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், சென்னையிலிருந்து வடக்கே உள்ள திருவள்ளூர், திருப்பதி, காளஹஸ்தி, நெல்லூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளுக்கென மாதவரத்தில், கல்கத்தா தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்வட்ட சாலை சந்திப்பில், 8 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய பேருந்து நிலையம் அமைத்திட 2011-12ஆம் ஆண்டு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டது.

    அந்த அறிவிப்பிற்கிணங்க, மாதவரத்தில் 95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட மாதவரம் அடுக்குமாடி புறநகர் பேருந்து நிலையத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

    இந்த புதிய பேருந்து நிலையம், அடித்தளம், தரைத்தளம் மற்றும் மேல்தளம் ஆகியவற்றை உள்ளடக்கி கட்டப்பட்டுள்ளது. பேருந்து நிலையக் கட்டடத்தின் அடித்தளத்தில் பயணிகள் வசதிக்காக 1700 இருசக்கர வாகனங்கள் மற்றும் நிலையக் கட்டடத்தின் முன் பகுதியில் 72 சீருந்துகள் நிறுத்துவதற்கான இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    பேருந்து நிலையக் கட்டடத்தின் தரைத்தளத்தில் பயணிகள் காத்திருப்பு இருக்கைகள், பொது கழிவறைகள், பயணச்சீட்டு வழங்கும் இடங்கள், தாய்மார்களுக்கான பாலூட்டும் தனி அறை, உணவகம் மற்றும் ஏ.டி.எம். போன்ற வசதிகளும், மேல் தளத்தில் அவசர சிகிச்சை அளிக்க மருத்துவ வசதி, பயணிகளுக்கான ஓய்வு அறை, ஓட்டுநர்-நடத்துனர்களுக்கான ஓய்வு அறைகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

    மேலும், இப்பேருந்து நிலையத்தில், ஒரே நேரத்தில் தரை தளத்திலிருந்து 42 பேருந்துகள் இயக்கும் வண்ணம், 2 நடைமேடைகளில் பேருந்து நிறுத்த பாந்துகள், 48 இயங்கா பேருந்துகள் நிறுத்தி வைக்க மேல்தளத்தில் போதிய இடவசதியும் செய்யப்பட்டுள்ளது.

    அதுமட்டுமின்றி, சிமெண்ட் கான்கீரிட் நடைபாதை, மழைநீர் வடிகால் வசதி, குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு வசதி, தீயணைப்பு வசதி மற்றும் உயர்ந்த மின் விளக்கு கம்பங்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இதனால் குறிப்பாக வடசென்னைப் பகுதி பொது மக்கள் பெரிதும் பயனடைவர்.

    உணவு தானிய மொத்த விற்பனை அங்காடி வளாகம், அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் கட்டி முடிக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த உணவு தானிய மொத்த விற்பனை அங்காடி வளாகத்தினுள், வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக தானிய கிடங்கு மற்றும் வணிகக் கட்டடம் அமைக்கப்படும் என்று 2014-15ஆம் ஆண்டிற்கான வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, கோயம்பேடு, உணவு தானிய மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில், ஒரு தாழ்தளம், தரைதளம் மற்றும் இரண்டு மேல்தளங்களுடன், மொத்தம் 65,313 சதுர அடி கட்டட பரப்பளவில், 21 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கடைகளுடன் கூடிய தானிய கிடங்கு மற்றும் வணிக வளாகக் கட்டடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.



    தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 34 பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்கு, அவர்களது கல்வித் தகுதி மற்றும் பதிவு மூப்பு அடிப்படையில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் ஓட்டுநர் ஆகிய பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 7 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

    சுற்றுச்சூழல் மாசுபடுவதை குறைக்கின்ற வகையில், இங்கிலாந்து நாட்டின் சர்வதேச அமைப்பான சி40 என்கிறமுகமையின் ஒத்துழைப்புடன் சென்னையில் 80 மின்சார பேருந்துகளும், கோவையில் 20 மின்சார பேருந்துகளும் விரைவில் இயக்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பொது மக்களின் பயன்பாட்டிற்காக, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு (சென்னை) 60 பேருந்துகளும், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 103 பேருந்துகளும், சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 77 பேருந்துகளும், கோவை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 43 பேருந்துகளும், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 111 பேருந்துகளும், மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 30 பேருந்துகளும், திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 46 பேருந்துகளும், மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு ஒரு பேருந்தும், என 155 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 471 புதிய பேருந்துகளை தொடங்கி வைக்கும் அடையாளமாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 7 பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இப்புதிய பேருந்துகளில், சென்னை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கான 60 பேருந்துகளில், 38 சொகுசு பேருந்துகள், 8 கழிவறை வசதியுடன் கூடிய நவீன சொகுசு பேருந்துகள், 10 குளிர்சாதன வசதிபடுக்கையுடன் கூடிய நவீன சொகுசு பேருந்துகள், 4 இருக்கை வசதியுடன் கூடிய குளிர்சாதன வசதி கொண்ட நவீன சொகுசு பேருந்துகள் பொது மக்களின் பயன்பாட்டிற்காக இன்று முதல் இயக்கப்படுகின்றன.

    இந்த நிகழ்ச்சிகளில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், டி.ஜெயக்குமார் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். #EdappadiPalaniswami #MadhavaramBusTerminus
    Next Story
    ×