search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாமிரபரணி புஷ்கர விழா நாளை மறுநாள் தொடக்கம்- கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்கிறார்
    X

    தாமிரபரணி புஷ்கர விழா நாளை மறுநாள் தொடக்கம்- கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்கிறார்

    பாபநாசத்தில் தாமிரபரணி புஷ்கர விழாவை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார். #ThamirabaraniMahaPushkaram #BanwarilalPurohit
    நெல்லை:

    144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரக்கூடிய தாமிரபரணி மகா புஷ்கர விழா இந்த ஆண்டு நடைபெறுகிறது. குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது, ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த ராசிக்கு உரிய நதிக்கு புஷ்கர விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு குரு பகவான் விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ந்ததையடுத்து விருச்சிக ராசிக்கு உரிய தாமிரபரணி ஆற்றுக்கு புஷ்கர விழா நடத்தப்படுகிறது.

    இந்த‌ விழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்கி, 23-ந் தேதி வரை நடைபெறுகிறது. விழாவையொட்டி சிருங்கேரி, காஞ்சி மடங்கள், துறவிகள் சங்கம், சித்தர்கள் கோட்டம், தாமிரபரணி புஷ்கர ஒருங்கிணைப்பு குழு உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் பூஜைகள், சிறப்பு யாகங்கள், தாமிரபரணிக்கு ஆரத்தி வழிபாடு நடத்த‌ ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாபநாசம் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள 64 தீர்த்த கட்டங்கள், 143 படித்துறைகளில் புஷ்கர விழா பூஜைகள் நடைபெறுகின்றன.

    நெல்லை அருகன்குளம் ஜடாயு தீர்த்தம், செப்பறை கோவில், மணிமூர்த்தீசுவரம் உச்சிஷ்ட கணபதி கோவில் படித்துறைகள் முற்றிலும் புதுப்பித்து கட்டப்பட்டு உள்ளன. தூத்துக்குடியில் முறப்பநாடு தலத்தில் படித்துறைகள் சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு படித்துறைகள் புதுப்பிக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு உள்ளன.

    பாபநாசத்தில் தாமிரபரணி புஷ்கர விழாவை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார். புஷ்கர விழாவுக்காக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாளை(புதன்கிழமை) கார் மூலமாக குற்றாலத்துக்கு வருகிறார். அங்கு இரவில் தங்கும் அவர் 11-ந் தேதி காலையில் பாபநாசம் செல்கிறார்.

    அங்குள்ள படித்துறையில் புனித நீராடும் கவர்னர் அங்கிருந்து திருப்புடைமருதூருக்கு சென்றுவிட்டு மதியம் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுக்கிறார். மாலையில் நெல்லை அருகன்குளம் ஜடாயு தீர்த்த பகுதியில் நடைபெறும் புஷ்கர விழாவில் கலந்துகொண்டு தாமிரபரணிக்கு ஆரத்தி பூஜையை தொடங்கி வைக்கிறார். இதற்காக தீர்த்த கட்டத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நதிக்கரையில் 144 அடியில் படித்துறை அமைக்கப்பட்டுள்ளது. மாலை 5.30 மணிக்கு விழா தொடங்குகிறது.

    முன்னதாக எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலைக்கு செல்லும் கவர்னர் அங்கு வழிபாடு நடத்துகிறார். தொடர்ந்து மகா ஆரத்தி நடைபெறுகிறது. ஆரத்தி பூஜையின்போது காசியில் கங்கைக்கு நடப்பதுபோன்று மகாபாரணி ஆரத்தி செய்யப்படுகிறது. இதற்காக காசியில் இருந்து 7 சிறப்பு ஆரத்தி தட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    தாமிரபரணி புஷ்கர விழாவுக்காக நெல்லை அருகன்குளம் ஜடாயு தீர்த்தத்தில் அமைக்கப்பட்டுள்ள படித்துறை மற்றும் மேடை.

    சிறப்பு வேத பண்டிதர்களும் வருகிறார்கள். படித்துறையில் 7 அலங்கார வளைவுகள் அமைக்கப்படுகின்றன. விழாவின்போது தாமிரபரணியின் மையப்பகுதியில் படகுகளில் மீட்பு படையினரும், போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். புஷ்கர விழாவுக்காக எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையில் பிரமாண்டமான கோசாலை அமைக்கப்பட்டுள்ளது. 54 யாக குண்டங்களும், நடுவில் பத்ம குண்டமும் அமைக்கப்பட்டுள்ளன.

    புஷ்கர விழாவில் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேசுவரன் கடந்த 6-ந்தேதி இரவு நெல்லைக்கு வந்தார். அவர் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    அவர் கடந்த 2 நாட்களாக நெல்லையில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகிறார். பாபநாசம் படித்துறைகள், அங்கு செய்யப்பட்டு உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும், நெல்லையில் உள்ள படித்துறைகள் தொடர்பாகவும் போலீஸ் ஐ.ஜி.சண்முகராஜேசுவரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், புஷ்கர விழாவுக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பாக நீராடுவதற்கு வசதியாக ஆற்றுக்குள் பாதுகாப்பு வளையம் அமைக்க உத்தரவிட்டார்.

    ஏற்கனவே ஆற்றுக்குள் உள்ள ஆழம் குறித்தும், எந்தெந்த இடங்களில் எத்தனை அடி தூரம் வரை பக்தர்களை அனுமதிப்பது என்றும் விழா குழுவினர் அறிக்கை தயார் செய்துள்ளனர். அதன்படி குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் பக்தர்கள் ஆற்றுக்குள் செல்ல முடியாத வகையில் இரும்பு கம்பிகளை நிறுவி, இரும்பு வலைகளை கட்டி பாதுகாப்பு வளையம் அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க ஐ.ஜி.சண்முகராஜேஸ்வரன் உத்தரவிட்டார். புஷ்கர விழாவுக்காக மாநகரில் 600 போலீசார் மாவட்டத்தில் 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் இருந்து 1500 போலீசார் பாதுகாப்புக்கு வரவழைக்கப்பட உள்ளனர். தேவைப்பட்டால் இதர மாவட்டங்களில் இருந்தும் போலீசார் பாதுகாப்புக்கு வரவழைக்கப்படுவார்கள் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. #ThamirabaraniMahaPushkaram #BanwarilalPurohit

    Next Story
    ×