search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாட்டில் மழைக்கு விவசாயி உள்பட 4 பேர் பலி
    X

    தமிழ்நாட்டில் மழைக்கு விவசாயி உள்பட 4 பேர் பலி

    தமிழ்நாட்டில் கன மழைக்கு விவசாயி உள்பட 4 பேர் இறந்தனர். #ChennaiRain
    சென்னை:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் கம்மாபுரத்தை சேர்ந்த விவசாயி ராமச்சந்திரன் (வயது 60) மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் ராமச்சந்திரன் உடல் கருகி பலியானார்.

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா ரெட்டியபட்டியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மனைவி கலா (44). நேற்றுமுன்தினம் இரவு திடீரென்று பெய்த கன மழையால் கண்மாயில் கட்டி இருந்த மாடுகளை மீட்டு வருவதற்காக ஜெயராஜூம், கலாவும் சென்றனர். மாடுகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்த கலா தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.



    நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சங்குப்பட்டி பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தபோது தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த சுப்புத்தாய் என்பவர் மின்னல் தாக்கி தனது கணவர் கண்முன்னே பலியானார்.

    திருப்பூரை சேர்ந்தவர் குருமூர்த்தி (31). இவர் தனது உறவினர் சந்தோஷ்குமார் (21) என்பவருடன் நேற்று மோட்டார் சைக்கிளில் செல்போனில் பேசியபடி சென்றார். அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் குருமூர்த்தி உயிரிழந்தார். சந்தோஷ்குமார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    திருப்பூரில் பெய்த பலத்த மழையின் காரணமாக 60-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதையடுத்து பொதுமக்கள் சிலர் தங்களது வீட்டின் மாடிகளில் உள்ள அறைகளில் தஞ்சம் அடைந்தனர்.

    நம்பியூர் பகுதியில் நேற்றுமுன்தினம் பெய்த மழையால் செட்டியம்பதி குளம் நிரம்பி, அந்த குளத்தில் இருந்து வெளியேறிய உபரிநீர் அருகே நம்பியூர் பெரியார்நகரில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது.

    கோபி அருகே உள்ள பொலவக்காளிபாளையம், பூசாரிவலசு பகுதியில் நேற்று முன்தினம் பெய்த மழையால் ஈரோடு-சத்தி மெயின்ரோட்டில் உள்ள தரைப்பாலத்தை மழை வெள்ளம் மூழ்கடித்தது. பொலவக்காளிபாளையத்தில் உள்ள 50 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

    கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டியில் பெய்த மழையில் வீடு இடிந்து சேதம் அடைந்தது. மேலும் சங்கரன்கோவில் அருகே ஒரு வீடும், கடையத்தில் ஒரு வீடும் இடிந்தது.

    சங்கரன்கோவில் அருகே உள்ள ஜமீன் இலந்தைகுளத்தை சேர்ந்த செல்லத்துரை என்பவருடைய வீட்டின் மாடி அறை திடீரென இடிந்து விழுந்தது. இதனால் வீட்டின் அருகே இருந்த மின்கம்பமும் சேதம் அடைந்தது.

    அம்பை மேலப்பாளையத்தை சேர்ந்த முத்துக்குமார் என்பவரது வீடு மழையால் இடிந்து விழுந்து சேதம் அடைந்தது.

    இதேபோல் அம்பை பண்ணை சங்கரய்யர் நகரில் ஓடு தயாரிக்கும் ஆலையின் காம்பவுண்டு சுவர் இடிந்து, பக்கத்தில் வசிக்கும் இளங்கோ என்பவரது வீட்டின் காம்பவுண்டு சுவர் மீது விழுந்தது. இதில் அவர் வீட்டுக்கு வந்திருந்த சங்கர் தெருவை சேர்ந்த ஐசக் (38) என்பவருக்கு காயம் ஏற்பட்டது.

    ஆலங்குளம் அருகே அடைக்கலபட்டினத்தில் உள்ள ஜெபக்குமார் என்பவருடைய வீட்டின் ஒரு பகுதி மழையில் இடிந்து விழுந்தது.

    அம்பை தீயணைப்பு நிலைய கட்டிடத்தை மின்னல் தாக்கியதில், மின்கம்பிகளில் தீப்பிடித்து மின் விசிறிகள், மின்விளக்குகள், டி.வி., டெலிபோன் இணைப்புகள் சேதம் அடைந்தன.

    ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கல்யாணிபுரத்தை சேர்ந்த மாயாண்டி (40) என்பவருடைய வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது.

    சிவகங்கை மாவட்டத்தில் பெய்த கனமழையால் மானாமதுரை அரசு ஆஸ்பத்திரிக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் அவதிக்குள்ளாயினர்.

    கனமழையில் மதுரையில் பல இடங்களில் மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. கனமழையால் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வடக்கு ஆடி வீதியில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி இருந்தது.

    ஈரோட்டில் திங்களூர் அருகே உள்ள போலநாயக்கன்பாளையம், பாப்பம்பாளையத்தில் நேற்றுமுன்தினம் இரவு பெய்த பலத்த மழையில் அந்த பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட குளம், குட்டைகள், தடுப்பணைகள் நிரம்பின.

    விருதுநகர் மாவட்டத்தில் பெய்த கனமழையில் காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்குள் மழைநீர் புகுந்தது.

    திருப்பூர் மாவட்டத்தில் பெய்த கனமழையில் நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

    குன்னத்தூர் பகுதியில் பெய்த பலத்த மழையில் 17 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதில் 3 வீடுகள் முற்றிலும் இடிந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இந்த 3 வீடுகளிலும் வசித்த 9 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளியில் தங்க வைக்கப்பட்டதால் உயிர் தப்பினார்கள்.

    குன்னத்தூர் அருகே கருமஞ்செறை ஆதிதிராவிடர் காலனியில் கனமழையால் 38 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. கருக்குப்பாளையத்தில் கனமழையால் 15 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. 
    Next Story
    ×