search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாவட்டம் முழுவதும் 661 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்
    X

    மாவட்டம் முழுவதும் 661 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்

    நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 661 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடந்தது.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 661 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடந்தது. நாமக்கல்லில் நடந்த முகாமை சப்-கலெக்டர் கிராந்திகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நாமக்கல் மாவட்டத்தில் 1.1.2019-ஐ தகுதி நாளாக கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகள் கடந்த 1-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

    இந்த சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகளின் போது 18 வயது பூர்த்தியடைந்த, அதாவது 31.12.2000-ம் அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம்-6 விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலகங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்கள் மற்றும் அருகாமையில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் அளிக்கலாம். மேலும் வாக்காளர்களின் தேவைக்கேற்ப பெயர் நீக்கம் செய்வதற்கான படிவம்-7, திருத்தம் செய்வதற்கான படிவம்-8 மற்றும் ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் இடமாற்றம் செய்ய படிவம்-8 ஏ ஆகியவற்றினையும் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப்பணியை முன்னிட்டு 4 ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தவும் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள 661 வாக்குச்சாவடி மையங்களில் நேற்று சிறப்பு முகாம் நடைபெற்றது.

    நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட கொண்டிசெட்டிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் வகுரம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாமினை நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்திகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றத்திற்கான படிவங்கள் தேவையான அளவு உள்ளதா ? என்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் திருத்தப்பணிகள் மேற்கொள்வதற்காக வாக்குச்சாவடி மையத்திற்கு வந்திருந்த விண்ணப்பதாரர்களின் படிவங்களையும் பார்வையிட்டும் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது நாமக்கல் தாசில்தார் செந்தில்குமார் உள்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர். மேலும் நாமக்கல் கோட்டை நகரவை தொடக்கப் பள்ளியிலும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
    Next Story
    ×