search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டி மலை ரெயில் 3 நாட்கள் ரத்து - சுற்றுலா பயணிகள் வரவேண்டாம் என கலெக்டர் வேண்டுகோள்
    X

    ஊட்டி மலை ரெயில் 3 நாட்கள் ரத்து - சுற்றுலா பயணிகள் வரவேண்டாம் என கலெக்டர் வேண்டுகோள்

    நீலகிரி மாவட்டம் முழுவதும் தற்போது மேக மூட்டம் அதிகமாக காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் 2 நாட்கள் நீலகிரிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட, கொடநாடு, பந்தலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

    ஊட்டி, குன்னூரில் நேற்று இரவு மழை பெய்தது. மழை காரணமாக ஊட்டிக்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் 2 நாட்கள் நீலகிரிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறி உள்ளார்.

    இது குறித்து அவர் கூறும் போது, நீலகிரி மாவட்டம் முழுவதும் தற்போது மேக மூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து வாகனங்களை இயக்கி வருபவர்களுக்கு பாதிப்பு ஏற்பட கூடும் என்பதால் 2 நாட்கள் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றார்.

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினமும் மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அடர்ந்த வன பகுதி வழியாக செல்லும் இந்த ரெயிலில் சுற்றுலா பயணிகள் அதிக அளவு பயணம் செய்வார்கள்.

    தற்போது ஊட்டியில் பெய்து வரும் மழை மற்றும் மேகமூட்டம் காரணமாக மலை ரெயில் சேவை 3 நாட்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    ஊட்டி - குன்னூர் சாலை தலையாட்டு மந்து பகுதியில் சாலை அகலப்படுத்தப்பட்ட இடத்தில் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. மேலும் பன்சிட்டி பகுதியில் தடுப்பு சுவர் கட்டப்பட்ட இடத்தில் ஒரு வீட்டின் அருகே மண் சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

    ஊட்டி-குன்னூர் சாலையில் அரசு பஸ்கள் உள்ளிட்ட கன ரக வாகனங்கள் செல்வதால் அதிர்வு காரணமாக சாலை மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

    அங்கு மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருக்கிறது. இரு புறங்களிலும் ஒவ்வொரு வாகனமாக செல்ல அனுமதிக்கப்படுகிறது.

    இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணி வகுத்து நிற்பதால் இதனை கடந்து செல்ல 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

    மழை காரணமாக பாதிப்பு ஏற்படும் இடங்களில் சீரமைப்பு பணிகளை மேற் கொள்ள அரக்கோணத்தில் இருந்து வந்துள்ள பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

    குன்னூரில் பெய்த மழையால் சிங்கார தோப்பு, பாபு கிராமம், லூர்துபுரம் ஆகிய இடங்களில் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியது.

    இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த மலை காய்கறிகளான கேரட், முள்ளங்கி, பீட்ரூட் உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    திருப்பூர், உடுமலை, அவினாசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது.

    உடுமலையை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி மலை உள்ளது. இங்கு அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.

    கோவிலின் அடிவாரத்தில் இருந்து சற்று உயரத்தில் அடர்ந்த வன பகுதியில் பஞ்சலிங்க அருவி இருக்கிறது. மேற்கு தொடர்சி மலை பகுதியில் பெய்த மழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

    இந்த வெள்ளம் அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்தது. இதனால் கோவிலில் பூஜைகள் ரத்து செய்யப்பட்டது.திருமூர்த்தி மலையில் மலை வாழ் மக்கள் வசிக்கும் செட்டில் மெண்ட் பகுதியில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் மக்கள் அவதி அடைந்தனர்.

    கோவையிலும் நேற்று இரவு பல்வேறு இடங்களில் மழை பெய்தது.
    Next Story
    ×