search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழித்துறை அருகே ரெயில் மோதி தொழிலாளி பலி- மற்றொருவர் கவலைக்கிடம்
    X

    குழித்துறை அருகே ரெயில் மோதி தொழிலாளி பலி- மற்றொருவர் கவலைக்கிடம்

    குழித்துறை அருகே தண்டவாளத்தை கடந்தபோது ரெயில் மோதி தொழிலாளி பலியானார். மற்றோருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    குழித்துறை:

    மார்த்தாண்டத்தை அடுத்த பல்லன்விளையை சேர்ந்தவர் ஜான் (வயது 40). மார்த்தாண்டம் மார்க்கெட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    ஜானின் நண்பர் ஜாபர் (40). இவரும் காய்கறி மார்க்கெட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர்கள் வேலை பார்க்கும் காய்கறி மொத்த வியாபாரி வெளியூரில் இருந்து காய்கறிகளை வாங்கி வந்து அதனை மார்த்தாண்டம் மார்க்கெட்டில் விற்பனை செய்வார்.

    அந்த காய்கறிகளை வெளியூருக்கு சென்று ஜானும், ஜாபரும் வாங்கி வருவார்கள். அதன்படி நேற்று இவர்கள் இருவரும் மதுரைக்கு செல்ல இருந்தனர்.

    இதற்காக மார்த்தாண்டம் ரெயில் நிலையத்தில் இருந்து இருவரும் மதுரைக்கு செல்ல முடிவு செய்தனர். இதற்காக நேற்றிரவு ஜானும், ஜாபரும் மார்த்தாண்டம் ரெயில் நிலையம் நோக்கி நடந்து சென்றனர்.

    அப்போது ரெயில் நிலையத்திற்கு ஷாலிமர் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. இந்த ரெயில் மார்த்தாண்டம் ரெயில் நிலையத்தில் நிற்காது. இதை அறியாத ஜானும், ஜாபரும் அந்த ரெயிலில் ஏறுவதற்காக ரெயில் நிலையம் நோக்கி வேகமாக சென்றனர்.இதற்காக தண்டவாளத்தையும் கடந்தனர்.

    அப்போது வேகமாக வந்த ஷாலிமர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஜான், ஜாபர் இருவர் மீதும் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

    அங்கு ஜாபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து கிடந்தார். ஜான் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக்கொண்டிருந்தார்.

    தகவல் அறிந்து ரெயில்வே போலீசாரும் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் பலியான ஜாபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    உயிருக்கு போராடிய ஜானை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இறந்து போன ஜாபருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இதுபோல ஜானுக்கும் திருமணமாகி மனைவியும் குழந்தைகளும் உள்ளனர்.அவர்கள் சம்பவம் பற்றி அறிந்ததும் கதறி அழுதனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    Next Story
    ×