search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மார்த்தாண்டத்தில் லேப்-டாப்பில் மின்சாரம் பாய்ந்து பிளஸ்-1 மாணவி பலி
    X

    மார்த்தாண்டத்தில் லேப்-டாப்பில் மின்சாரம் பாய்ந்து பிளஸ்-1 மாணவி பலி

    மார்த்தாண்டத்தில் இரவில் படித்து கொண்டிருந்தபோது லேப்-டாப்பில் மின்சாரம் பாய்ந்து பிளஸ்-1 மாணவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    மார்த்தாண்டம்:

    மார்த்தாண்டத்தை அடுத்த சிராயன்குழி, காட்டுவிளையை சேர்ந்தவர் பெனட். ராணுவ வீரர்.

    பெனட்டிற்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகன் மதுரையில் படித்து வருகிறார். மகள் பெஜின் (வயது 16). உண்ணாமலை கடை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்- 1 படித்து வந்தார்.

    தினமும் வீட்டில் இரவு நீண்ட நேரம் கண்விழித்து படிப்பார். இதற்காக லேப்- டாப்பும் பயன்படுத்துவார்.

    வழக்கம் போல பெஜின் நேற்றிரவும் வீட்டில் படித்து கொண்டிருந்தார். அவர் அருகில் லேப்-டாப்பும் இருந்தது. அதனை சார்ஜரில் போட்டபடி பெஜின் படித்து கொண்டிருந்ததாக தெரிகிறது.

    இன்று காலை பெஜினின் அறை நீண்ட நேரம் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அவரது அறைக்கு சென்று பார்த்தனர். அங்கு பெஜின், லேப்-டாப்பில் தலைசாய்த்தபடி இறந்து கிடந்தார்.

    அதிர்ச்சி அடைந்த பெற்றோர் லேப்-டாப்பை அகற்றிவிட்டு பெஜினை மீட்க முயன்றனர். அப்போது லேப்-டாப்பில் மின்சாரம் பாய்ந்திருப்பது தெரியவந்தது.

    பெஜின் இரவில் படித்து முடித்த பின்பு லேப்-டாப்பை சார்ஜரில் இருந்து அகற்றவில்லை என்றும், இதில் மின்சாரம் பாய்ந்து அவர் இறந்திருக்கலாம் எனவும் தெரிகிறது. இதுபற்றி பெஜினின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெஜினின் தந்தை தற்போது காஷ்மீர் மாநிலத்தில் வேலை பார்த்து வருகிறார். மகள் இறந்த தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    நன்றாக படிக்கும் மாணவி, படித்து கொண்டிருந்த போதே இறந்து போன சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    Next Story
    ×