search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி கடலில் மாயமான‌ 18 மீனவர்களை தேடும் பணி தீவிரம்
    X

    தூத்துக்குடி கடலில் மாயமான‌ 18 மீனவர்களை தேடும் பணி தீவிரம்

    தூத்துக்குடி கடலில் மாயமான‌ 18 மீனவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #Fishermenboat

    தூத்துக்குடி:

    தென்தமிழகத்தில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இன்றும் நாளையும் மிக பலத்த மழை பெய்யும் என்று ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என்றும், கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனே கரை திரும்ப வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல வில்லை. 2 நாட்களுக்கு முன்னர் கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்ப தகவல் கொடுக்கப்பட்டது.

    இதனால் பெரும்பாலான மீனவர்கள் கரைக்கு திரும்பி உள்ளனர். தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தை சேர்ந்த ரவி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மிக்கேல்ராஜ், ஜெகன், கில்பட், ஜோசப், குழந்தைராஜ், ராஜ், வல்லவன், வசந்த், ராமர் டால்வின் ஆகிய 10 பேரும், பவுல்ராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் விஜி, சுதாகர், அந்தோணி, விக்கி, அன்சாரி, செல்வராஜ், ஜோபின், எபிஸ்டன் ஆகிய 8 மீனவர்களும் கடந்த 1-ந் தேதி தருவைகுளத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றனர்.


    புயல் எச்சரிக்கை குறித்து தகவல் தெரிவிப்பதற்காக அவர்களை மற்ற மீனவர்கள் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அந்த 2 படகுகளையும் நேற்று இரவு வரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்கள் சற்று அதிக தொலைவு சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனாலும், புயல் எச்சரிக்கை நேரத்தில் 18 மீனவர்கள் மாயமானது உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியை சந்தித்து மனு கொடுத்தனர். பிற மீனவர்கள் அனைவரும் கரை திரும்பிய நிலையில், இரண்டு படகுகளில் உள்ள 18 மீனவர்கள் மட்டும் இன்னமும் திரும்பி வராதது தங்களுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், அவர்களின் படகுகளை தேடும் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மீன்வளத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதைதொடர்ந்து தூத்துக்குடி கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் ரோந்து கப்பலில் சென்று மீனவர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். கடந்த 5 நாட்களாக கடலில் இருக்கும் 18 மீனவர்கள் கதி என்ன? எங்கு இருக்கிறார்கள்? என்பது தெரியாமல் உறவினர்கள் தவித்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #Fishermenboat

    Next Story
    ×