search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலில் மீன்பிடிக்க சென்ற 6 மீனவர்கள் மாயம்
    X

    கடலில் மீன்பிடிக்க சென்ற 6 மீனவர்கள் மாயம்

    காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற 6 மீனவர்கள் மாயமானார்கள். அவர்களை கடலோர காவல் படையினர் படகுகளில் சென்று தேடி வருகின்றனர். #Fishermen
    திருவொற்றியூர்:

    சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு சொந்தமான படகில் கடந்த 26-ந் தேதி காலை 7 மணிக்கு காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புதுவண்ணாரப்பேட்டை மார்க்கெட் பாரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 35), ஆசைதம்பி (38), திடீர் நகரைச் சேர்ந்த மணி (30), பூண்டி தங்கம்மாள் தெருவைச் சேர்ந்த முத்து (50), அண்ணா நகரைச் சேர்ந்த சுரேஷ் (33), முருகேசன் (53) ஆகிய 6 மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர்.

    அவர்கள் கடலுக்குள் சென்ற நாள் முதல் சக மீனவர்கள் மற்றும் குடும்பத்தினரால் அவர்களுடன் தொடர்புகொள்ள முடியவில்லை. 26-ந் தேதி கடலுக்குள் சென்ற அவர்கள், 1-ந் தேதி கரை திரும்பி இருக்க வேண்டும். ஆனால் இதுவரையிலும் 6 பேரும் கரை திரும்பவில்லை. அவர்கள் கடலில் மாயமாகி இருப்பது தெரிந்தது.

    இதுபற்றி காசிமேட்டில் உள்ள மீன்வளத்துறை உதவி இயக்குனரிடம் சக மீனவர்கள் தகவல் அளித்தனர். அவர்கள், கடலோர காவல் படையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து கடலோர காவல்படையினர், தங்களுக்கு சொந்தமான 2 படகுகளில் கடலுக்குள் சென்று, மாயமான 6 மீனவர்களையும் தேடி வருகின்றனர்.

    மேலும் மீனவர்கள் சங்கங்கள் சார்பிலும் விசை படகுகளில் கடலுக்குள் சென்று மாயமான மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாயமான மீனவர்கள், கடல் சீற்றத்தில் சிக்கி ஆந்திர மாநில பகுதியில் கரை ஒதுங்கினார்களா? அல்லது அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை.

    மாயமான மீனவர்கள் பற்றிய எந்த தகவலும் இதுவரையிலும் கிடைக்கவில்லை என்பதால் மீனவர்களின் குடும்பத்தினர், சக மீனவர்கள் சோகத்தில் உள்ளனர். சம்பவம் தொடர்பாக காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் விசாரித்து வருகின்றனர். #Fishermen
    Next Story
    ×