search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குன்னம் பகுதியில் பலத்த மழை: மின்னல் தாக்கி விவசாயி பலி - 12 ஆடுகள் செத்தன
    X

    குன்னம் பகுதியில் பலத்த மழை: மின்னல் தாக்கி விவசாயி பலி - 12 ஆடுகள் செத்தன

    குன்னம் பகுதிகளில் பலத்த மழை பெய்த போது மின்னல் தாக்கியதில் விவசாயி பரிதாமாக இறந்தார். மேலும் பசுமாடு, 12 ஆடுகள் செத்தன.
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அடுத்த கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம். இவரது மகன் அறிவழகன் (வயது 40). விவசாயி. இவர் அப்பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதையடுத்து மழைக்காக அவர் அருகில் உள்ள மரத்தடியில் ஒதுங்கி நின்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கியதில் அறிவழகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அறிவழகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் அணைப்பாடி கிராமத்தை சேர்ந்த தர்மராஜ் என்பவர் தனது ஆடுகளை அப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் 12 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தது. இதுகுறித்து மருவத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாடாலூரை சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி வெள்ளையம்மாள். இவர் நேற்று தனது பசுமாட்டை பாடாலூர் கால்நடை மருத்துவமனை அருகில் உள்ள மரத்தடியில் கட்டியிருந்தார். இந்நிலையில் அப்பகுதியில் மதியம் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பசுமாடு இறந்தது. இதுகுறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×