search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கந்தர்வகோட்டை அருகே பஸ் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
    X

    கந்தர்வகோட்டை அருகே பஸ் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

    கந்தர்வகோட்டை அருகே பஸ் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை மருத்துவர் நகர் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் கார்த்தி(வயது 18). இவர் பிளஸ்-2 வரை படித்து முடித்து விட்டு, தஞ்சாவூரில் உள்ள ஒரு செல்போன் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் தினமும் வேலைக்கு கந்தர்வகோட்டையில் இருந்து தஞ்சாவூருக்கு பஸ்சில் சென்று வருவது வழக்கம். அதேபோல நேற்றும் ஒரு அரசு பஸ்சில் கந்தர்வகோட்டையில் இருந்து தஞ்சாவூருக்கு சென்று கொண்டிருந்தார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் கார்த்தி பஸ்சின் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் கந்தர்வகோட்டை அருகே உள்ள சுங்கச்சாவடி அருகே வேகத் தடையில் பஸ் ஏறி இறங்கியபோது, பஸ்சின் படிக்கட்டில் நின்ற கார்த்திக் தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த கார்த்தியை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரசு பஸ் டிரைவர் செல்லத்துரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×