search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகை-திருவாரூர் மாவட்டங்களில் மழைக்கு 3 பேர் பலி
    X

    நாகை-திருவாரூர் மாவட்டங்களில் மழைக்கு 3 பேர் பலி

    தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் மழைக்கு 3 பேர் பலியாகியுள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று தஞ்சாவூர், கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், அம்மாப்பேட்டை உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    பூதலூரில் பலத்த மழை பெய்தது. பூதலூர் ரெயில்வே கீழ் பாலத்தில் மழை வெள்ளம் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று மாலை பெய்த மழை காரணமாக பூதலூரில் தாழ்வான பகுதியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது.

    இதைபோல திருக்காட்டுப் பள்ளி, செங்கிப்பட்டி ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்ததால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திருக்காட்டுப் பள்ளியில் அரசு மருத்துவ மனை, போலீஸ் நிலையம் முன்பும் மழை நீர் குளம் போல் தேங்கி உள்ளது.

    திருக்காட்டுப் பள்ளி பகுதியில் ஆழ்குழாய் கிணறு மூலம் தண்ணீர் பாய்ச்சி சாகுபடி செய்த குறுவை பயிர் சாகுபடி நடந்து வந்தது. இந்த மழை காரணமாக அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.

    பூதலூர் அருகே உள்ள ராயன் முண்டான் பட்டி பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மனைவி கவிதா. இவர் நேற்று ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலைக்கு சென்று சக தொழிலாளர்களுடன் வேலை பார்த்து கொண்டிருந்தார்.

    அப்போது இடியுடன் மழை பெய்தது. திடீரென கவிதாவை மின்னல் தாக்கியது. இதில் உடல் கருகி அவர் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பூதலூர் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தஞ்சையை அடுத்த ஒரத்தநாடு, கவராப்பட்டு தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி சுசிலா (வயது 60). இவர் நேற்று வீட்டின் பின்புறம் சென்ற போது அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து விட்டார்.இதில் மின்சாரம் தாக்கி அவர் மயங்கி விழுந்தார். அவரது சத்தம் கேட்டு மகன் வீரமணி (30). ஓடி வந்து தனது தாய் சுசிலாவை தூக்க முயன்றார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது. இதில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய 2 பேரையும் பொதுமக்கள் மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர்கள் 2 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    மழை மற்றும் காற்று காரணமாக மின்கம்பி அறுந்து விழுந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை அனைத்து பகுதிகளிலும் மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படித்து வரும் மாணவர்களுக்கு தனியார் பள்ளி கூட்டமைப்பு விடுமுறை அறிவித்துள்ளது.

    திருவாரூர் மாவட்டத்திலும் நேற்று பரவலாக மழை பெய்தது. திருவாரூர், வலங்கைமான், நன்னிலம், நீடாமங்கலம், மன்னார்குடி, முத்துப்பேட்டை உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வலங்கை மான் பகுதியில் பலத்தமழை பெய்தது.

    திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து இன்றும் பலத்த மழை பெய்து வருவதால் கலெக்டர் நிர்மல்ராஜ் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்துள்ளார்.

    நாகை மாவட்டத்திலும் நேற்று முதல் தொடர் மழை பெய்து வருகிறது. சீர்காழி, மயிலாடுதுறை, கொள்ளிடம், வேதாரண்யம், நாகப்பட்டினம் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்தது.

    இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிபட்டனர். மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ் குமார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்துள்ளார்.

    டெல்டா மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் பின்வருமாறு:-

    கல்லணை - 50.6

    திருக்காட்டுப்பள்ளி - 71.8

    தஞ்சாவூர் - 20

    வலங்கைமான் - 39.4

    நன்னிலம் - 58.4

    சீர்காழி - 76.4

    நீடாமங்கலம் - 47.8

    முத்துப்பேட்டை - 30.6

    திருவாரூர் - 34.6

    நாகை - 37.4

    வேதாரண்யம் - 63.6

    பூதலூர் - 102.2

    வெட்டிக்காடு - 22.2

    ஒரத்தநாடு - 28.4

    பட்டுக்கோட்டை - 40.7

    மதுக்கூர் - 62

    Next Story
    ×