search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகர்கோவில் பகுதியில் கொட்டி தீர்த்த கனமழை
    X

    நாகர்கோவில் பகுதியில் கொட்டி தீர்த்த கனமழை

    நாகர்கோவில் பகுதியில் இடி மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்ததால் சாலைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டத்தில் பல பகுதிகளில் மழை பெய்தது. அதிகபட்சமாக கன்னியாகுமரி அருகே மயிலாடியில் 11 மி.மீ.மழை பதிவாகி இருந்தது.

    நாகர்கோவில் பகுதியில் இன்று காலை வெயில் அடித்தது. பகல் 12 மணி அளவில் திடீரென சீதோஷ்ணம் மாறியது. வானில் கருமேகங்கள் திரண்டன. இரவாகி விட்டதோ என்றும் எண்ணும் அளவுக்கு நகரம் இருளில் மூழ்கியது.

    வானம் இருண்டு காணப்பட்ட சிறிது நேரத்தில் மழை கொட்ட தொடங்கியது. அது மெல்ல, மெல்ல தீவிரம் அடைந்தது. அப்போது இடியும் மின்னலும் காணப்பட்டது. அதோடு சூறாவளி காற்றும் சுழன்றடித்தது.

    இம்மழை காரணமாக நாகர்கோவில் நகரில் மீனாட்சிபுரம் சாலை, மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலை, கோட்டார், செட்டிக்குளம் சாலைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. கோட்டார் பகுதியில் மழை வெள்ளத்துடன் கழிவுநீரும் கலந்து ஓடியது.

    இந்த திடீர் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் இருச்சக்கர வாகன ஓட்டிகள் சிக்கி தவித்தனர். கனரக வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டப்படி மழை வெள்ளத்தில் மிதந்து சென்றது. மழை வெள்ளத்தில் சிக்கி பல வாகனங்கள் நடுரோட்டில் நின்றுவிட்டன. இதனால் நகரின் பல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    நாகர்கோவிலில் பெய்த மழை போல கன்னியாகுமரி, அஞ்சுகிராமம், மயிலாடி, கொட்டாரம், சாமிதோப்பு, தென்தாமரைகுளம் பகுதிகளில் இன்று பகல் 11.30 மணி முதலே கனமழை பெய்தது.

    இதுபோல குமரி மேற்கு மாவட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. மார்த்தாண்டம், குழித்துறை, திருவட்டார், குலசேகரம்,பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார், கன்னிமார், பூதப்பாண்டி, கடுக்கரை, தெரிசனங்கோப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

    அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக குமரி மாவட்டத்தின் கடற்கரை கிராமங்களிலும் சூறை காற்றுடன் கன மழை பெய்தது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான அனைத்து கடற்கரை கிராமங்களிலும் இந்த மழை பெய்தது.

    Next Story
    ×