search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் சிறந்த மருத்துவ சேவை, தூய்மை பராமரிப்பு - 17 அரசு மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு ரூ.3 கோடி பரிசு
    X

    தமிழகத்தில் சிறந்த மருத்துவ சேவை, தூய்மை பராமரிப்பு - 17 அரசு மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு ரூ.3 கோடி பரிசு

    தமிழகத்தில் சிறந்த மருத்துவ சேவை, தூய்மை பராமரிப்புக்காக தேர்வு செய்யப்பட்ட 17 அரசு மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு ரூ.3 கோடி பரிசு வழங்கியது. #BestMedicalService #TamilNadu #CentralGovernment #Hospital
    சென்னை:

    தமிழகத்தில் சிறந்த மருத்துவ சேவை, தூய்மை பராமரிப்புக்காக தேர்வு செய்யப்பட்ட 17 அரசு மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு ரூ.3 கோடி பரிசு வழங்கியது. அதை அதிகாரிகளிடம், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

    தேசிய தர உறுதித் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் மேம்படுத்தப்பட்ட மருத்துவ சேவைகள், தரமான சுகாதார குறியீடு, முறையான பராமரிப்பு, மருத்துவமனை வழங்கும் சேவைகள் குறித்து நோயாளிகளின் கருத்துகள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு சிறந்த மருத்துவமனைகள் தேர்வு செய்யப்படுகின்றன. அவ்வாறு தேர்வு செய்யப்படும் அரசு மருத்துவமனைகளுக்கு, மருத்துவமனைகளில் ஒரு படுக்கைக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதமும், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வீதமும் பரிசுத் தொகையும், தர சான்றிதழும் மத்திய அரசு வழங்கி வருகிறது. இப்பரிசுத் தொகை 3 ஆண்டுகளுக்கு தொடர்ந்து வழங்கப்படும்.

    தேசிய ஆய்வுக் குழுவால் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 17 பிரிவுகளும், மாவட்ட துணை மருத்துவமனைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் 12 பிரிவுகளும், கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 6 பிரிவுகளும் ஆய்வு செய்யப்படுகிறது.

    2017-18-ம் ஆண்டில், மத்திய அரசால் அனுப்பப்பட்ட 3 உறுப்பினர்கள் அடங்கிய தேசிய ஆய்வுக் குழு, தமிழ்நாடு அரசால் பரிந்துரைக்கப்பட்ட 7 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளையும், 6 ஆரம்ப சுகாதார நிலையங்களையும் ஏப்ரல், மே மாதங்களில் 3 நாட்கள் ஆய்வு செய்தது.

    அதன்படி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, தர்மபுரி மாவட்டம் பென்னாகரம், கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம், ஈரோடு, கடலூர், நாமக்கல், நீலகிரி மாவட்டம் ஊட்டி ஆகிய 7 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் தர்மபுரி மாவட்டம் பாளையம்புதூர், மொரப்பூர், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி, கடலூர் மாவட்டம் வடலூர், விழுப்புரம் மாவட்டம் முகையூர், சேலம் மாவட்டம் மேச்சேரி ஆகிய 6 மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதற்கு தேசிய தர சான்றிதழ்களுடன் ரூ.2 கோடியே 7 லட்சத்து 70 ஆயிரத்து 666 பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

    இதேபோல் மருத்துவமனை தூய்மை மற்றும் சுற்றுப்புற சுகாதாரம், நோய்த்தொற்று தடுப்பு ஆகியவற்றில் சிறந்து விளங்கும் அரசு மருத்துவமனைகளை மாநில அளவில் ஆண்டுதோறும் 3 கட்டமாக ஆய்வு செய்து முதல் இரு இடங்களை பெறும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு மத்திய அரசால் காயகல்ப் விருதும், முறையே ரூ.50 லட்சமும், ரூ.20 லட்சமும் பரிசாக வழங்கப்படுகிறது. வட்ட மருத்துவமனை மற்றும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு முதல் பரிசாக தலா ரூ.15 லட்சம் வழங்கப்படும்.

    அதன்படி மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் சிறந்து விளங்கிய கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முதல் பரிசையும், திருச்சி மாவட்டம் மணப்பாறை, அரசு தலைமை மருத்துவமனை 2-ம் பரிசையும் பெற்றது. வட்ட மருத்துவமனையில் சிறந்து விளங்கிய விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையும், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறந்து விளங்கிய விழுப்புரம் மாவட்டம் முகையூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் முதல் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த மருத்துவமனைகளுக்கு மத்திய சுகாதார துறையால் காயகல்ப் விருதுகளும், பரிசுத்தொகையாக ரூ.1 கோடி பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.

    சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 13 அரசு மருத்துவமனைகளுக்கு மத்திய சுகாதார துறையால் வழங்கப்பட்ட தர சான்றிதழ்கள், ரூ.2 கோடியே 7 லட்சத்து 70 ஆயிரத்து 666-க்கான காசோலைகளையும், தூய்மை பராமரிப்பிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 4 அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்ட காயகல்ப் விருதுக்கான கேடயம், பாராட்டு சான்றிதழ், ரூ.1 கோடிக்கான காசோலைகளையும் மாவட்ட இணை இயக்குனர்கள் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்), துணை இயக்குனர்கள் (சுகாதார பணிகள்) ஆகியோரிடம் வழங்கினார். முன்னதாக இந்த விருது, பாராட்டு சான்றிதழை எடப்பாடி பழனிசாமியிடம், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

    நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநில நலவாழ்வு குழுமத்தின் குழும இயக்குனர் டாக்டர் தரேஸ் அகமது, தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் ருக்மணி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.  #BestMedicalService #TamilNadu #CentralGovernment #Hospital 
    Next Story
    ×