search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடலூர் அருகே 18-ம் கால்வாயில் மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்
    X

    கூடலூர் அருகே 18-ம் கால்வாயில் மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

    கூடலூர் அருகே 18-ம் கால்வாயில் மணல் கடத்த பயன்படுத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கூடலூர்:

    கூடலூர் பகுதியில் மணல் கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக முல்லைப் பெரியாறு 18-ம் கால்வாய் பகுதியில் அதிக அளவு மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது.

    இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டதால் பொது மக்கள் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் காலிக் குடங்களுடன் அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது. மணல் கொள்ளையர்களை போலீசார் பிடித்து நடவடிக்கை எடுத்த போதும் மணல் கடத்தலை தடுக்க முடியவில்லை. கூடலூர் தெற்கு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி தலைமையிலான போலீசார் கூடலூர் - லோயர் கேம்ப் தேசிய நெடுஞ் சாலையில் ரோந்து சென்றனர். அரசு ஆஸ்பத்திரி அருகே வேகமாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்ட போது அதில் 18-ம் கால்வாய் ஓடைப்பகுதியில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. டிராக்டரை பறிமுதல் செய்து உத்தமபாளையம் ஆர்.டி.ஓ.விடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    மேலும் இது குறித்து கூடலூர் கருணாநிதி காலனியைச் சேர்ந்த ஈஸ்வரன், டிரைவர் பாண்டியன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×