search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவில் கும்பாபிஷேகத்துக்கு அனுமதி வழங்கக்கோரி 22 கிராம மக்கள் போராட்டம் நடத்த முடிவு
    X

    கோவில் கும்பாபிஷேகத்துக்கு அனுமதி வழங்கக்கோரி 22 கிராம மக்கள் போராட்டம் நடத்த முடிவு

    கல்லலில் கோவில் கும்பாபிஷேகத்துக்கு அனுமதி வழங்கக்கோரி 22 கிராம மக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
    கல்லல்:

    காரைக்குடியை அடுத்த கல்லலில் பிரசித்தி பெற்ற சோமசுந்தரேசுவரர்-சவுந்திரநாயகி அம்மன் கோவில் உள்ளது. சிவகங்கை சமஸ்தான, தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசிமக திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். அதிலும் இந்த திருவிழாவின்போது நடைபெறும் தேரோட்ட விழாவில் கல்லலில் உள்ள 44 ஊராட்சிக்குஉட்பட்ட 22 கிராம மக்கள் உள்ளிட்ட பல்லாயிரக் கணக்காக மக்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வருவது மற்றொரு தனிச்சிறப்பாக இருந்து வருகிறது.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11-ந்தேதி பாலாலயம் நடைபெற்றது.

    இதையடுத்து கோவிலில் உள்ள கோபுரங்கள் மற்றும் கோவில் சுவற்றுக்கு வர்ணம் அடிப்பதற்காக சாரம் பூசப்பட்ட நிலையில் இந்து சமய நிலையத்துறை சார்பில் கும்பாபிஷேகத்திற்கான அனுமதி வழங்காததால் இன்றுவரை அந்த கோவிலில் எந்தவித திருப்பணியும் நடைபெறாமல் இருந்து வருகிறது. இதையடுத்து கோவில் கோபுரங்களில் திருப்பணி வேலைக்காக கட்டப்பட்ட சாரம் உறுதியற்ற நிலையில் தற்போது உள்ளது.

    இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:- கல்லலில் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் விமான கோபுரம் உள்பட 13 கோபுரங்கள் உள்ளன. இதுதவிர சிவன், அம்பாள், பைரவர், மகாலெட்சுமி, படிக்காசு விநாயகர், சண்டிகேசுவரர் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனுமதி வழங்காமல் உள்ளதால் இந்த பகுதியில் போதிய மழையில்லாமலும், தெப்பக்குளத்தில் போதிய தண்ணீர் இல்லாமல் இருந்து வருகிறது.

    பல்வேறு கிராம மக்கள் இந்த தெப்பக்குளத்தை குளிப்பதற்கு, துணி சலவை உள்ளிட்ட தேவைக்கு பயன்படுத்தி வரும் வேளையில் தற்போது தண்ணீர் இல்லாமல் இருப்பது மிகவும் வேதனையளிக்கும் செயலாக உள்ளது.

    எனவே இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இனிமேலும் காலம் தாழ்த்தாமல் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு உரிய அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுக்கள் வழங்கி விட்டு கல்லல் மற்றும் அதை சுற்றியுள்ள 22 கிராம மக்களும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 
    Next Story
    ×