search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணைகள்- முதல்வர் வழங்கினார்
    X

    தூத்துக்குடி சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணைகள்- முதல்வர் வழங்கினார்

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். #ThoothukudiFiring #EdappadiPalaniswami
    சென்னை:

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது, நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பலியானோர் மற்றும் காயமடைந்தோரின் குடும்பங்களில் யாருக்கு அரசு வேலை வழங்கலாம் என்பது பற்றியும் கல்வித் தகுதி குறித்தும் மாவட்ட நிர்வாகம் அறிக்கை அளித்தது.

    அதன் அடிப்படையில், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் 10 வாரிசுதாரர்களுக்கும், இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த 5 நபர்களுக்கும், பலத்த காயமடைந்தவர்களின் 4 வாரிசுதாரர்களுக்கும், என மொத்தம் 19 நபர்கள் அரசு வேலை வழங்க தேர்வு செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவர்கள் 19 பேருக்கும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை ஆகிய துறைகளில் பணிபுரிந்திட கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

    நிகழ்ச்சியில், அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர் (கூடுதல் பொறுப்பு) செந்தில்குமார், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் சந்தூரி, பொதுத்துறை துணை செயலாளர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். #ThoothukudiFiring #EdappadiPalaniswami
    Next Story
    ×