search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெற்றோரை இழந்த தவித்த ஆனந்திக்கு கலெக்டர் கந்தசாமி சத்துணவு அமைப்பாளர் பணி நியமன ஆணையை வழங்கிய காட்சி.
    X
    பெற்றோரை இழந்த தவித்த ஆனந்திக்கு கலெக்டர் கந்தசாமி சத்துணவு அமைப்பாளர் பணி நியமன ஆணையை வழங்கிய காட்சி.

    பெற்றோரை இழந்து வறுமையில் தவித்த பெண்ணுக்கு அரசு பணி- வீட்டிற்கே சென்று உத்தரவை வழங்கிய கலெக்டர்

    பெற்றோரை இழந்து வறுமையில் தவித்த 19 வயது இளம் பெண்ணுக்கு சத்துணவு அமைப்பாளர் பணிக்கான உத்தரவை அவரது வீட்டிற்கே நேரடியாக சென்று கலெக்டர் வழங்கினார். #TiruvannamalaiCollector
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கனிகிலுப்பை கிராமத்தை சேர்ந்தவர் வனிதா. சத்துணவு உதவியாளராக பணிபுரிந்து வந்த அவர், கடந்த 2014-ம் ஆண்டு இறந்து விட்டார்.

    இவரது கணவர் வெங்கடேசன் கடந்த ஓராண்டிற்கு முன்பு சிறுநீரக கோளாறு ஏற்பட்டு இறந்து விட்டார். இவர்களது மகள்கள் ஆனந்தி (வயது 19), அபி (17) மற்றும் மகன் மோகன் (16) ஆகியோர் பாட்டி ராணியின் பராமரிப்பில் இருந்து வந்தனர்.

    இதனை தொடர்ந்து ஆனந்தி கடந்த மாதம் 13-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தார்.

    அதில் ‘‘தனது தாயார் பணிக்காலத்தில் இறந்து விட்டார். அதன்பின் பாட்டியின் பராமரிப்பில் தங்கை, தம்பியுடன் வசித்து வருகிறேன். அவர்களை காப்பாற்றுவதற்காக நான் கூலி வேலைக்கு சென்று வருகிறேன். எனவே கருணை அடிப்படையில் எனக்கு வேலை வழங்க வேண்டும்’’ என தெரிவித்திருந்தார். பிளஸ்-2 முடித்த ஆனந்தி கல்லூரி ஒன்றில் பி.ஏ.படித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி பாட்டி ராணியும் இறந்து விட்டதால் திக்கற்ற நிலையில் தவித்த ஆனந்தி கலெக்டரை மீண்டும் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கியுள்ளார். அப்போது அவரிடம் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கூறுகையில், ‘‘19 வயதுள்ளவருக்கு அரசுப் பணி வழங்க எவ்வித முகாந்திரமும் இல்லை, எனினும் தமிழக அரசு தலைமை செயலாளருக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என உறுதியளித்தார். நேற்று கனிகிலுப்பை கிராமத்திற்கு வந்த கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தன்னிடம் மனு அளித்த ஆனந்தியின் வீட்டிற்கே நேரடியாக சென்றார்.

    அப்போது ஆனந்தி மற்றும் அவரது தங்கை, தம்பி ஆகியோரின் படிப்பு குறித்து விசாரித்து தைரியப்படுத்தினார். அத்துடன் அவரது வீட்டிலேயே மதிய உணவை சாப்பிட்ட கலெக்டர், ஆனந்தியிடம் ‘‘உங்களுடைய கஷ்டங்களை அரசுக்கு தெரிவித்து இதே ஊரில் சத்துணவு அமைப்பாளராக பணிசெய்ய உத்தரவினை வழங்க வந்துள்ளேன்’’ என்றார். தொடர்ந்து பணி உத்தரவினை ஆனந்தியிடம் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வழங்கி அதற்கான நகல்களில் அவரே கையெழுத்துப் பெற்றார். #TiruvannamalaiCollector
    Next Story
    ×