search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேன்கனிக்கோட்டை அருகே 2 சிறுத்தை புலிகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி
    X

    தேன்கனிக்கோட்டை அருகே 2 சிறுத்தை புலிகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி

    தேன்கனிக்கோட்டை அருகே 2 சிறுத்தை புலிகள் நுழைந்து உள்ளதால் வனப்பகுதியையொட்டி உள்ள கிராம மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், ஜவுளகிரி அய்யூர், நொகனூர், உரிகம், அஞ்செட்டி, பெட்டமுகிலாளம ஆகிய கிராமங்கள் வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காட்டையொட்டி அமைந்து உள்ளன. ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் முதல் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் வரை ராகிப்போரை குறிவைத்து 100-க்கும் அதிகமான யானை கும்பல் நுழைவதும் வழக்கமான ஒன்று.

    வருடம் முழுவதும் யானைகள் மேற்கண்ட காப்புக்காடுகளில் தஞ்சம் அடைவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கண்காணிப்பு கேமிராவில் கர்நாடக மாநிலமான பன்னேர்கட்டா வனப்பகுதியில் இருந்து 2 சிறுத்தை புலிகள் ஜவுளகிரி காப்புக் காட்டுக்குள் நுழையும் காட்சி பதிவாகி உள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்ட வன அலுவலர் தீபக் பில்ஜிக்கு கிடைத்த அதிகாரப்பூர்வமான செய்தியின் அடிப்படையில் ஜவுளகிரி காப்புக்காட்டுக்குள் நுழைந்த 2 சிறுத்தை புலிகளின் நடமாட்டம் குறித்து கண்காணிக்க ஜவுளகிரி வனச்சரகர் முருகேசனுக்கு உத்தரவிட்டார். அவரின் உத்தரவுப்படி ஜவுளகிரி வனச்சரகர் முருகேசன் மற்றும் வனத்துறையினர் இரவு பகலாக கண்காணிப்பு கேமராவில் பதிவான சிறுத்தை புலிகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் தீபக்பில்ஜி பொதுமக்களுக்கு விடுத்து உள்ள வேண்டுகோளில் கூறி இருப்பதாவது:-

    காப்புக்காட்டின் அருகில் வசிக்கும் பொதுமக்கள் ஆடு, மாடுகளை வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்காக அனுப்ப வேண்டாம். அப்படி வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    2 சிறுத்தை புலிகள் நுழைந்து உள்ளதால் வனப்பகுதியையொட்டி உள்ள கிராம மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
    Next Story
    ×