search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை அருகே குடோனில் பதுக்கிய 2½ டன் குட்கா பறிமுதல் - 3 பேர் மீது வழக்கு
    X

    கோவை அருகே குடோனில் பதுக்கிய 2½ டன் குட்கா பறிமுதல் - 3 பேர் மீது வழக்கு

    கோவை அருகே குடோனில் வைத்திருந்த சாக்குமூட்டையில் பதுக்கிய ரூ. 14 லட்சம் மதிப்புள்ள 2½ டன் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
    கோவை:

    கோவை சூலூர் கண்ணம் பாளையத்தில் இயங்கி வந்த குட்கா குடோனில் கடந்த ஏப்ரல் மாதம் போலீசார் அதிரடி சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அங்கிருந்து ரூ.80 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. அதன் பின்னர் போலீசாரும், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களும் தொடர்ந்து சோதனை நடத்தி குடோன்களில், கடைகளில் இருந்து குட்காவை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் அன்னூரை அடுத்த மசகவுண்டன் செட்டிப்பாளையத்தில் ஒரு குடோனில் அதிக அளவில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது குடோன் பூட்டப்பட்டு இருந்தது. உடனே பூட்டை உடைத்து உள்ளே சென்று போலீசார் சோதனை நடத்தினர்.

    அங்கு ஏராளமான மூட்டைகளில் குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அங்கிருந்து மொத்தம் 2,350 கிலோ எடை கொண்ட குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு சுமார் ரூ.14 லட்சம் ஆகும்.

    போலீசார் நடத்திய விசாரணையில் இந்த குடோன் அன்னூரை சேர்ந்த சாந்த குமார்(வயது 38) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. கோவை கணபதியை சேர்ந்த பட்டுராஜன், சரவணம்பட்டி விநாயகபுரத்தை சேர்ந்த தங்கசிங் ஆகியோர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இந்த குடோனை வாடகைக்கு எடுத்து குட்கா மூட்டைகளை பதுக்கி வைத்தது தெரிய வந்தது.

    இங்கிருந்து வாகனத்தில் குட்கா மூட்டைகளை கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைத்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதைத்தொடர்ந்து பட்டுராஜன், தங்கசிங், சாந்தகுமார் ஆகிய 3 பேர் மீதும் புகையிலை பொருட்கள் தடை சட்டம் 2003 மற்றும் கூட்டுசதி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதுதொடர்பாக குடோன் உரிமையாளர் சாந்த குமாரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பட்டுராஜன், தங்கசிங் ஆகியோர் மளிகை பொருட்களை வைப்பதற்காக தனது குடோனை கேட்டதாகவும், அதன்பேரில் குடோனை வாடகைக்கு கொடுத்ததாகவும் கூறினர்.

    குடோனுக்குள் அரிசி, உப்பு மூட்டைகள் மற்றும் மளிகை பொருட்கள் ஏராளமாக இருந்தது. தொடர்ந்து சாந்த குமாரிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார் பட்டுராஜன், தனசிங் ஆகியோரை தேடி வருகின்றனர். மேலும் அங்கிருந்து 1 சொகுசு கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    பட்டுராஜா, தனசிங் ஆகியோர் பிடிபட்டால் தான் எங்கிருந்து குட்காவை வாங்கி வந்தார்கள்? யார்- யாருக்கெல்லாம் விற்பனை செய்தார்கள்? என்பது தெரிய வரும். தலைமறைவான இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    Next Story
    ×