search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்: 3 ஆயிரம் பேரை நீக்க விண்ணப்பம் - கலெக்டர் ரோகிணி தகவல்
    X

    வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்: 3 ஆயிரம் பேரை நீக்க விண்ணப்பம் - கலெக்டர் ரோகிணி தகவல்

    சேலம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமில் 3 ஆயிரம் பேரை நீக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என கலெக்டர் ரோகிணி தெரிவித்தார்.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம் நேற்று 2-வது கட்டமாக 3,288 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது. சி.எஸ்.ஜ தொழில்நுட்ப கல்லூரி, ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் நேற்று நடந்த வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாமை கலெக்டர் ரோகிணி நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- வருகிற 30-ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அந்தந்த வாக்குப்பதிவு மையங்கள் தாசில்தார் அலுவலகங்களில் விண்ணப்ப படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும், பெயர் விடுபட்டவர்கள், ஏற்கனவே உள்ள சட்டமன்ற தொகுதியிலிருந்து வேறு தொகுதிக்கு குடிபெயர்ந்தவர்கள் ஆகியோர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தகுதியுடையவர்கள் ஆவர்.

    மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாமில் இதுவரை 22 ஆயிரத்து 54 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. இதில் 3 ஆயிரம் பேரின் பெயரை நீக்க விண்ணப்பிக்கப்பட்டு இருக்கிறது. இறந்துபோன மற்றும் இரட்டை பதிவாக இருக்கும் அவர்களின் பெயரை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    இரட்டை பதிவு கொண்ட நபரின் பெயரை இரு இடத்திலும் நீக்கி விடுவதாக அரசியல் கட்சியினர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதை மிக கவனமுடன் பார்த்து ஒரு இடத்தில் மட்டும் பெயரை நீக்க வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். கல்லூரியில் படிக்கும் 18 வயது நிரம்பிய மாணவர்களை வாக்காளர்களாக சேர்க்க ஒவ்வொரு கல்லூரியிலும் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்களை புதிய வாக்காளர்களாக சேர்த்து வருகின்றோம். இவ்வாறு கலெக்டர் ரோகிணி கூறினார்.

    இந்த ஆய்வின் போது சேலம் வருவாய் கோட்டாட்சியர்(பொ) ஜெகநாதன், தாசில்தார்கள் திருமாவளவன், தீபசித்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    Next Story
    ×