search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தினகரன் அ.தி.மு.க.வை கைப்பற்ற நினைக்கிறார்- அமைச்சர் வேலுமணி
    X

    தினகரன் அ.தி.மு.க.வை கைப்பற்ற நினைக்கிறார்- அமைச்சர் வேலுமணி

    ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்ட தினகரன் அ.தி.மு.க.வை கைப்பற்ற நினைக்கிறார் என்று சூலூரில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.
    சூலூர்:

    கோவையை அடுத்த சூலூரில் ஒன்றிய அ.தி.மு.க. செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு பேசினார்.

    சூலூர் சட்டமன்ற தொகுதி எப்போதும் அ.தி.மு.க.வின் கோட்டையாக உள்ளது. இது ஒன்றிய செயல் வீரர்கள் கூட்டம் போல் அல்லாமல் மாவட்ட மாநாடு போன்று இருக்கிறது. ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்ட டி.டி.வி. தினகரன், தற்போது அ.தி.மு.க.வை கைப்பற்ற நினைக்கிறார். அது ஒருபோதும் நடக்காது. அ.தி.மு.க.வின் மீது ஊழல் குற்றம் சாட்ட தி.மு.க. வுக்கு என்ன தகுதி இருக்கிறது. மக்களுக்கு நல்லது செய்யாமல், குடும்பத்தை செல்வ செழிப்பாக மாற்றியவர்கள் கருணாநிதி குடும்பத்தினர்.

    ஜெயலலிதாவின் ஆட்சியில் தான் சூலூர் தொகுதியில் அதிகளவிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் சாலை விரிவாக்கம், கூட்டுக்குடிநீர் திட்டம் மற்றும் கல்வி உதவித்தொகை, சுய உதவி குழுக்களுக்கு நிதி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன. அ.தி.மு.க.வின் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறப்பாக செயலாற்றி வருகின்றனர். எனவே நாங்கள் ஓட்டு கேட்க மக்களை உரிமையோடு நாடி வருவோம். அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்வது ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்வது போன்றதாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் தமிழக சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கொள்கை பரப்பு துணை செயலாளர் செ.ம.வேலுசாமி, எம்.பி.க்கள் ஏ.கே.செல்வராஜ், மகேந்திரன், எம்.எல்.ஏ.க்கள் எட்டிமடை சண்முகம், கஸ்தூரி வாசு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாதப்பூர் பாலு நன்றி கூறினார்.
    Next Story
    ×