என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மு.க.அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்க திமுக தொண்டர்கள் 1 லட்சம் பேரிடம் கையெழுத்து வேட்டை
மதுரை:
தி.மு.க.வின் தென் மண்டல அமைப்பு செயலாளராக இருந்தவர் மு.க.அழகிரி. முன்னாள் மத்திய மந்திரியான இவர் கடந்த 2014-ம் ஆண்டு தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.
அதன் பிறகு நடைபெற்ற சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் தி.மு.க.வுக்கு எதிரான நிலையை எடுத்தார் மு.க.அழகிரி. தனது ஆதரவாளர்களை மாற்றுக்கட்சிக்கு வாக்கு சேகரிக்க உத்தரவிட்டதால் தி.மு.க.வினருக்கும், மு.க.அழகிரி ஆதரவாளர்களுக்கும் சில இடங்களில் மோதல் ஏற்பட்டது.
இந்த நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த மாதம் 7-ந்தேதி மரணம் அடைந்த பிறகு மு.க.அழகிரி மீண்டும் தி.மு.க.வில் சேர்த்துக் கொள்ளப்படுவார் என்ற பரபரப்பு நிலவி வந்தது.
இதுதொடர்பாக தி.மு.க. செயல்தலைவராக இருந்த மு.க.ஸ்டாலினிடம் அவரது குடும்பத்தினரும், தி.மு.க. மேலிட தலைவர்களும் விவாதித்தனர். ஆனாலும் மு.க.அழகிரியை தி.மு.க.வில் சேர்க்க மு.க.ஸ்டாலின் விரும்பவில்லை.
இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி சென்னையில் கருணாநிதியின் நினைவிடத்திற்கு மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் அமைதி பேரணி சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போதும் தி.மு.க. மீது தனது அதிருப்தியை மு.க.அழகிரி வெளிப்படுத்தினார்.
தி.மு.க.வில் மீண்டும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று மு.க.அழகிரி விரும்பினாலும் அதற்கு கட்சி தலைமை பச்சைக்கொடி காட்டாத நிலையில் மதுரையில் அண்ணா, பெரியார் பிறந்த தினத்தில் அவர்களது சிலைகளுக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மு.க.அழகிரியை தி.மு.க.வில் சேர்க்க வலியுறுத்தும் வகையில் அவரது முக்கிய ஆதரவாளரான முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன் தலைமையில் தமிழகம் முழுவதும் தி.மு.க. தொண்டர்களிடம் கையெழுத்து பெற முடிவு செய்யப்பட்டது.
அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவாளர்கள் மூலம் தி.மு.க. தொண்டர்களிடம் மு.க.அழகிரியை கட்சியில் சேர்க்க கையெழுத்து பெறப்பட்டு வருகிறது.
கையெழுத்திடும் தொண்டர்களின் உறுப்பினர் அடையாள எண், வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகியவற்றையும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.
இன்னும் சில வாரங்களில் கையெழுத்து வேட்டை முடிக்கப்பட்டு அதனை தி.மு.க. தலைமை கழகத்தில் ஒப்படைக்க மு.க.அழகிரி ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதனிடையே மு.க.அழகிரி நேற்று திருவாரூர் சென்று கருணாநிதியின் புகழஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது தனிக்கட்சி தொடங்கும் திட்டம் இல்லை என்றும், எனக்கு இழைக்கப்பட்ட அநீதியை மக்களிடத்தில் நிச்சயம் கேட்பேன் என்று குறிப்பிட்டார்.
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து தேர்தல் நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என குறிப்பிட்ட மு.க.அழகிரி, மக்கள் கொடுக்கும் ஆதரவை பார்க்கும்போது தேர்தலில் நின்றால் எனக்கு வெற்றி நிச்சயம் என்றும் கூறினார்.
எனவே மு.க.அழகிரி திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் எண்ணத்தில் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவரது ஆதரவாளர் பி.எம்.மன்னன் கூறியதாவது:-
தி.மு.க.வின் வளர்ச்சிக்கு எத்தனையோ தியாகங்களை செய்தவர் அண்ணன் மு.க.அழகிரி. அவர் மீண்டும் கழகத்தில் இணைந்து பணியாற்ற விரும்புகிறார்.
அவரது விருப்பத்தை நிறைவேற்றுகின்ற வகையில் லட்சக்கணக்கான தி.மு.க. தொண்டர்களும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
மு.க.அழகிரிக்கு தொண்டர்கள் மத்தியில் உள்ள ஆதரவை கட்சி தலைமைக்கு எடுத்துக்காட்டுகின்ற வகையில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தொண்டர்களிடம் கையெழுத்து பெறப்பட்டு வருகிறது. சுமார் 1 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற திட்டமிடப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இதுவரை பெறப்பட்ட சுமார் 10 ஆயிரம் தொண்டர்களின் கையெழுத்தை கட்சியின் தலைமைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம்.
திருவாரூர் தொகுதியில் நேற்று அண்ணன் மு.க.அழகிரிக்கு பொது மக்கள் அளித்த உற்சாகத்தை பார்க்கும்போது அங்கு அவர் போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
அங்குள்ள தொண்டர்கள் நீங்கள்தான் தலைவர் கலைஞரின் சொந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர்.
எனவே இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து மு.க.அழகிரி தேர்தல் சமயத்தில் நிச்சயம் முடிவை அறிவிப்பார். கலைஞரின் தொகுதியில் மு.க.அழகிரிக்கு உள்ள செல்வாக்கை நிரூபித்து காட்ட வேண்டும் என்ற ஆசை என் போன்ற தொண்டர்கள் அனைவருக்கும் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்