search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பண்ருட்டியில் பெண்களிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது
    X

    பண்ருட்டியில் பெண்களிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது

    பண்ருட்டியில் பெண்களிடம் நகை பறித்த 2 வாலிபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து தங்க சங்கிலி, மோட்டார் சைக்கிள் மற்றும் கத்தி, செல்போன்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
    பண்ருட்டி:

    சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர்கள் அருண்குமார் (வயது 23), நவீன்குமார் (20). இவர்கள் 2 பேரும் பல திருட்டு வழக்குகளில் கைதாகி சிறை சென்றவர்கள்.

    இவர்கள் இருவரும் சென்னையிலிருந்து பண்ருட்டி வந்தனர். பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை அருகே வந்து கொண்டு இருந்த போது கண்டரக்கோட்டை- சென்னை சாலையில் நடந்து சென்ற சத்துணவு பெண் ஊழியர் ஆதிலட்சுமி (55) என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த செல்போனை பறித்து சென்றனர்.

    பண்ருட்டி எல்.என்.புரம் பகுதியில் வசித்து வரும் தனியார் கம்பெனி ஊழியர் சிவசங்கர் என்பவரின் மனைவி நந்தினி (28). இவர் தனது குழந்தையை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல ஆட்டோவுக்காக ரோட்டோரம் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த இவர்கள் இருவரும் கையில் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி நந்தினிடமிருந்து தங்க சங்கிலியையும், செல்போனையும் பறித்து சென்றனர்.

    நந்தினியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் மற்றும் அந்த பகுதியில் ரோந்து பணியிலிருந்த போலீசார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு திருடர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்து பண்ருட்டி போலீசில் ஒப்படைத்தனர்.

    பண்ருட்டி இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், சப்- இன்ஸ்பெக்டர்கள் விஷ்ணுப் பிரியா, அண்ணாமலை, கோவிந்தசாமி, குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் லூயிஸ் ராஜ் ஆகியோர் பிடிபட்ட திருடர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அதில் அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சென்னையில் இருந்து திருடி வந்தது என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் மறைத்து வைத்து இருந்த 5 பவுன் தங்க சங்கிலி, மோட்டார் சைக்கிள் மற்றும் கத்தி, செல்போன்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    கொள்ளையர்களை துணிச்சலாக துரத்தி பிடித்து சென்று பிடித்த பண்ருட்டி, புதுப்பேட்டை போலீசாரை துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் பாராட்டினார்.

    Next Story
    ×