search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் அமைச்சர் தங்கமணி ஆய்வு செய்த காட்சி.
    X
    தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் அமைச்சர் தங்கமணி ஆய்வு செய்த காட்சி.

    காற்றாலை திட்டத்தில் ஊழல் என முக ஸ்டாலின் கூறுவது உண்மைக்கு புறம்பானது- அமைச்சர் தங்கமணி

    காற்றாலை மின்சாரத்தில் ஊழல் என்று மு.க.ஸ்டாலின் கூறுவது உண்மைக்கு புறம்பானது என்று தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். #TNMinister #Thangamani #DMK #MKStalin
    தூத்துக்குடி:

    தமிழகத்தில் மின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிப்பது தூத்துக்குடி அனல் மின்நிலையம். இங்கு தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினமும் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    முதல் மூன்று யூனிட்கள் 30 ஆண்டுகளை கடந்தவை என்பதால் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இங்கு இயங்கிவந்த இரு யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தமிழக மின் வாரிய அமைச்சர் தங்கமணி இன்று தூத்துக்குடிக்கு வந்தார். தூத்துக்குடி அனல் மின்நிலையத்துக்கு வந்த அவர் அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    இதைத்தொடர்ந்து அவர் அனல்மின் நிலைய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது மின் உற்பத்தி தடைபடாமல் தொடர்ந்து நடைபெற உரிய ஆலோசனைகளை வழங்கினார்.

    பின்னர் அமைச்சர் தங்கமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லை. தற்போது இங்கு 1 லட்சத்து 2 ஆயிரம் டன் நிலக்கரி இருப்பு உள்ளது. வருகிற 25‍-ந்தேதி ஒரு கப்பலில் நிலக்கரி வர உள்ளது. இதனால் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படாது.

    தமிழகத்தில் தற்போதைய சூழலில் காற்றாலைகள் மூலமாக 3500 மெகாவாட், சூரிய சக்தி மூலமாக 1500 மெகாவாட், தண்ணீர் மூலம் 2500 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. மின் உற்பத்தி அதிகமாக இருப்பதாலேயே தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது. நிலக்கரி தட்டுப்பாடு என்பது தவறான தகவல்.

    தமிழகத்தில் புதிதாக 4 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் உடன்குடி, எண்ணூர், வடசென்னை ஆகிய இடங்களில் புதிய அனல் மின்நிலையங்கள் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க கடல் நீரை சுத்தம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மழை நீரை சேகரிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.


    காற்றாலை மின்சாரத்தில் ஊழல் என்று மு.க.ஸ்டாலின் கூறுவது உண்மைக்கு புறம்பானது. தனியார் நிறுவனம்தான் அரசுக்கு ரூ9.17 கோடி செலுத்தவேண்டியுள்ளது.

    பாளையங்கோட்டையில் 50 கிலோவாட் மின்சக்தி திறன் கொண்ட துணை மின் நிலையத்தை 80 கிலோவாட் சக்தி கொண்டதாக மாற்ற திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்குவதாக இருந்தது. அதற்காகவே மின்தடை அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Thangamani #DMK #MKStalin

    Next Story
    ×