search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எச்.ராஜாவை கண்டித்து சமயபுரம்-ஸ்ரீரங்கம் கோவில் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    எச்.ராஜாவை கண்டித்து சமயபுரம்-ஸ்ரீரங்கம் கோவில் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

    அறநிலையத்துறை அதிகாரிகள் வீட்டு பெண்கள் பற்றி பேசிய எச்.ராஜாவை கண்டித்து சமயபுரம்-ஸ்ரீரங்கம் கோவில் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #HRaja #BJP
    திருச்சி:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசிய பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா, அறநிலையத்துறை அலுவலர்களையும், அவர்களின் வீட்டு பெண்களையும் அவதூறாக பேசினார். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் எச்.ராஜாவின் பேச்சை கண்டித்தும், அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருச்சி மலைக்கோட்டையில் அறநிலையத்துறை கோவில் பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.

    அப்போது மலைக்கோட்டை கோவில் அலுவலகத்தை பூட்டியும், கோவிலில் கட்டண தரிசன சீட்டு வழங்காமல் கவுண்டரை பூட்டியும், பணி செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதே போல் சமயபுரம் மாரியம்மன் கோவில் பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் குமரதுரை தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது எச்.ராஜாவை கண்டித்து கோ‌ஷம் எழுப்பப்பட்டது.

    அறநிலையத்துறை அதிகாரிகள், பணியாளர்களின் பணி புறக்கணிப்பு போராட்டத்தால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கட்டணமின்றி அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.

    இந்து சமய அறநிலையத்துறை அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ரெங்கா, ரெங்கா கோபுரம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் கல்யாணி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், சமயபுரம் கோவில் இணை ஆணையர் குமரதுரை, திருவானைக்கோவில் உதவி ஆணையர் ஜெயப்பிரியா, மலைக்கோட்டை கோவில் உதவி ஆணையர் விஜயராணி, சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவில் நிர்வாக அதிகாரி பாரதராஜா மற்றும் அறநிலையத்துறை அனைத்து கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது அங்கு வந்த பா.ஜ.க. முன்னாள் ராணுவத்தினர் பிரிவு மாவட்ட தலைவர் நடராஜனுக்கும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் நடராஜனை அழைத்து சென்றனர்.

    பின்னர் தமிழ்நாடு முதுநிலை திருக்கோவில் பணியாளர்கள் சங்க இணை பொதுச்செயலாளர் சுதர்சன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திண்டுக்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா இந்துசமய அறநிலையத்துறை பணியாளர்கள் மற்றும் அவர்களது வீட்டு பெண்களை மிகவும் கேவலமாகவும், இழிவாகவும் பேசி உள்ளார்.

    கோவில் பணியாளர்கள் மட்டுமின்றி காவல்துறை, நீதித்துறை என அனைத்து அரசு ஊழியர்களையும் தகாத வார்த்தையால் தொடர்ந்து பேசி வருகிறார். அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்தும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் இந்து சமய அறநிலையத்துறை அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சங்க கூட்டமைப்பினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளோம்.

    இதுகுறித்து திருச்சி காவல் ஆணையர் அமல்ராஜிடம் மனு கொடுக்க உள்ளோம். இதனை தொடர்ந்து வரும் 27-ந்தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாநில அளவிலான உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம். எச்.ராஜாவை கைது செய்யும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்றார். #HRaja #BJP
    Next Story
    ×