search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்களுக்கான பயிலரங்கம்
    X

    கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்களுக்கான பயிலரங்கம்

    நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்களுக்கான 2 நாள் பயிலரங்கம் கோவையில் இன்று தொடங்கியது.
    கோவை:

    நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்களுக்கான 2 நாள் பயிலரங்கம் கோவையில் இன்று தொடங்கியது.

    அவினாசி சாலையில் உள்ள லீமெரிடியன் ஓட்டலில் நடைபெற்ற இந்த பயிலரங்கத்தில் கட்சியின் செயற் குழு உறுப்பினர்களாக ஸ்ரீபிரியா, கமீலா நாசர், பாரதி கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    மேலும், சிறப்பு அழைப்பாளராக கவிஞர் சினேகன் கலந்து கொண்டார். கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து 100-க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கட்சியின் வளர்ச்சி திட்டங்கள், உறுப்பினர் சேர்க்கை பணிகள் குறித்த ஆலோசனைகளை செயற் குழு உறுப்பினர்கள் வழங்கினர். சிறப்பு அழைப் பாளரான கவிஞர் சினேகன் பொறுப்பாளர்கள் மத்தியில் பேசினார். இந்த கூட்டத்தில் பார்வையாளர்கள், பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    நாளை(19-ந் தேதி) நடைபெறும் 2-வது நாள் பயிலரங்கத்தில் கமல்ஹாசன் கலந்து கொண்டு பொறுப்பாளர்களுக்கு கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை வழங்க உள்ளார்.

    கூட்டத்தில் பங்கேற்பதற்காக கமல்ஹாசன் நாளை காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். அங்கு அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

    பின்னர் அங்கிருந்து ஓட்டலுக்கு சென்று பயிலரங்கில் பங்கேற்கிறார். தொடர்ந்து மாலை 3 மணிக்கு குனியமுத்தூர் ஸ்ரீகிருஷ்ணா கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார்.

    இதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் மக்களுடனான பயணத்தை தொடங்கி பேசுகிறார். அதன்பின்னர் பொள்ளாச்சி மின்னல் மகாலில் நடைபெறும் அரிமா சங்க நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகிறார்.

    நாளை மறுநாள்(20-ந் தேதி) காலை 11 மணிக்கு திருப்பூர் மாவட்டம் பொன்னிவாடியில் மக்களுடனான பயணத்தை தொடங்குகிறார்.

    அங்கிருந்து தாராபுரம், காங்கேயம், பல்லடம், திருப்பூர் நகரில் சின்னாண்டிபாளையம், வீரபாண்டி பிரிவு, சி.டி.சி. டெப்போ, புதிய பஸ் நிறுத்தம், எஸ்.ஏ.பி. தியேட்டர் சந்திப்பு, பாப்பீஸ் ஓட்டல் ஆகிய பகுதிகளில் மக்களை சந்தித்து உரையாடுகிறார்.
    Next Story
    ×