search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூர் இடைத்தேர்தல் - சின்னம் வரையும் தகராறில் அ.தி.மு.க. பிரமுகருக்கு கத்திக்குத்து
    X

    திருவாரூர் இடைத்தேர்தல் - சின்னம் வரையும் தகராறில் அ.தி.மு.க. பிரமுகருக்கு கத்திக்குத்து

    திருவாரூரில் இடைத்தேர்தலையொட்டி சின்னம் வரையும் தகராறில் அ.தி.மு.க. பிரமுகரை தினகரன் அணியை சேர்ந்த அவரது அண்ணன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருவாரூர்:

    திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் பரபரப்பால் பல்வேறு கட்சியினரும் மும்முரமாக பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக சுவர்களில் கட்சி சின்னம் வரைவதில் கட்சியினர் இடையே போட்டா போட்டி நிலவி வருகிறது.

    இந்த நிலையில் சின்னம் வரையும் தகராறில் அ.தி.மு.க. பிரமுகரை தினகரன் அணியை சேர்ந்த அவரது அண்ணன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    திருவாரூர் அடுத்த சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 40). இவர் அ.தி.மு.க. கிளை பிரதிநிதியாக இருந்து வருகிறார். இவரது அண்ணன் ஜெய்சங்கர் (43). இவர் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர் ஆவார்.

    இந்த நிலையில் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்காக சுவர்களில் சின்னம் வரைவது தொடர்பாக ரமேஷ் குமாருக்கும், ஜெய்சங்கருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று ரமேஷ்குமார் வீட்டுக்கு அ.தி.மு.க.வை சேர்ந்த மோகன்குமார் என்பவர் வந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஜெய்சங்கர், மோகன் குமாரிடம் வாக்குவாதம் செய்து தகராறு செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ரமேஷ்குமார், ஜெய்சங்கரை கண்டித்து பேசினார்.

    இதையடுத்து ஜெய்சங்கர், தான் வைத்திருந்த கத்தியால் தம்பி ரமேஷ்குமாரை குத்தினார். அப்போது அங்கு வந்த ஜெய்சங்கரின் மனைவி திலகா, மற்றும் திருவாரூர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளர் ராமன் ஆகியோரும் ரமேஷ்குமார், மற்றும் மோகன்குமாரை தாக்கினர்.

    கத்திக்குத்து மற்றும் தாக்குதலில் ரமேஷ்குமார், மோகன் குமார் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். பின்னர் ஜெய்சங்கர் உள்பட 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

    காயம் அடைந்த ரமேஷ் குமார் மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஜெய்சங்கரும், தனது தம்பி ரமேஷ்குமார் தாக்கியதில் காயம் ஏற்பட்டதாக கூறி திருவாரூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் குறித்து ரமேஷ் குமார், ஜெய்சங்கர் ஆகியோர் தனித்தனியே கொடுத்த புகாரின் பேரில் திருவாரூர் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சசிரேகா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்கினர்.
    Next Story
    ×