search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேத்துப்பட்டில் குளிக்க சென்ற 2 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி பலி
    X

    சேத்துப்பட்டில் குளிக்க சென்ற 2 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி பலி

    சேத்துப்பட்டில் குளிக்க சென்ற 2 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் பற்றி தகவல் அறிந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஒன்றியம் நரசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன், விவசாயி. இவரது மனைவி காந்திமதி. இவர்களின் மகன் ரவி (வயது 12), நரசிங்கபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.

    அதே பகுதியை சேர்ந்தவர் விநாயகம், விவசாயி. இவரது மனைவி சிவசக்தி. இவர்களின் மகன் ரூபேஷ் (10), 6-ம் வகுப்பு படித்து வந்தான். விடுமுறை தினமான நேற்று ரவியும், ரூபேசும் நரசிங்கபுரம் பெரிய ஏரியில் குளிக்க சென்றனர்.

    அந்த ஏரியில் வண்டல் மண் எடுப்பதற்காக பள்ளங்கள் தோண்டப்பட்டிருந்தன. தற்போது பெய்த மழையால் பள்ளம் இருந்த இடமும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இந்த நிலையில் குளிப்பதற்காக இறங்கிய 2 சிறுவர்கள் அந்த பள்ளம் இருந்த இடம் தெரியாததால் அதில் இறங்கிவிட்டனர்.

    அவர்களுக்கு நீச்சல் தெரியாது என கூறப்படுகிறது. இதனால் நீரில் மூழ்க தொடங்கினர். இதனிடையே குளிக்க சென்ற சிறுவர்கள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவர்களது பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தனர்.

    அப்போது ஏரியின் கரையில் சிறுவர்கள் 2 பேரின் சட்டை துணிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள், ஏரியில் இறங்கி தேடி பார்த்தனர்.

    பின்னர் சிறுவர்களின் உடலை அவர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். ஏரியில் வண்டல் மண் எடுத்து பெரிய பள்ளத்தில் 2 சிறுவர்கள் மூழ்கி பலியானதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நரசிங்கபுரத்தில் இருந்து ஆரணி செல்லும் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சின்னராஜ், சேத்துப்பட்டு தாசில்தார் அரிதாஸ், வருவாய் ஆய்வாளர் பிரியா, சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தபாபு ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    பின்னர் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இறந்த சிறுவர்களின் குடும்பத்திற்கு வருவாய்த்துறை மூலம் அரசு நிதி வழங்க ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    பின்னர் ரவி மற்றும் ரூபேசின் உடலை பெற்றோர்கள் வீட்டிற்கு கொண்டு சென்றனர். போலீசாரும், வருவாய்த்துறையினரும் சிறுவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கூறியதால் அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். அதனை தொடர்ந்து 2 சிறுவர்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    Next Story
    ×