search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வில்லியனூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதலில் 2 வாலிபர்கள் பலி
    X

    வில்லியனூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதலில் 2 வாலிபர்கள் பலி

    வில்லியனூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 2 வாலிபர்கள் பலியானார்கள். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

    சேதராப்பட்டு:

    வில்லியனூர் அருகே அகரம் கிராமத்தை சேர்ந்தவர் ராகுல் (வயது19). நேற்று இரவு இவர் கூடப்பாக்கம் காலனியை சேர்ந்த தனது நண்பர் மதன் (19) என்பவருடன் அகரம் கிராமத்தில் இருந்து வில்லியனூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். மோட்டார் சைக்கிளை ராகுல் ஓட்டி செல்ல மதன் பின்னால் அமர்ந்து வந்தார்.

    கூடப்பாக்கம் அம்பேத்கார் சிலை அருகே வந்த போது முன்னாள் சென்ற காரை ராகுல் முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிரே கடப்பேரிக்குப்பத்தை சேர்ந்த ஆனந்த கார்த்திக் (19) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், ராகுல் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் அதிவேகமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

    இதில் தூக்கி வீசப்பட்ட ராகுல் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பிணமானார். மேலும் மதன் மற்றும் ஆனந்த கார்த்திக் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஆனந்த கார்த்திக் பரிதாபமாக இறந்து போனார்.

    தொடர்ந்து மதன் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று மேல்சிகிச்சைக்காக அவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்த விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புனிதராஜ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மோட்டார் சைக்கிள் விபத்தில் இறந்த 2 வாலிபர்களும் 19 வயதே ஆனவர்கள் என்பதால் அகரம் மற்றும் கடப்பேரிக்குப்பம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×