search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அவிநாசியில் இன்று காலை குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்
    X

    அவிநாசியில் இன்று காலை குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்

    அவிநாசியில் குடிநீர் வராதத்தை கண்டித்து இன்று காலை 200-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    அவினாசி:

    அவினாசியில் 18 வார்டுகள் உள்ளன. குடியிருப்பு நிறைந்த இந்த பகுதிகளுக்கு மேட்டுப்பாளையம் பவானி ஆற்று குடிநீர் பேரூராட்சி சார்பாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மாதம் ரூ.150 வசூல் செய்யப்படுகிறது.

    இந்நிலையில் இந்த பகுதிகளில் கடந்த சில நாட்களாக 15 நாட்கள் முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடியது. குடிநீர் சீராக விநியோகம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதில் ஆத்திரமடைந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் சேவூர்- அவினாசி செல்லும் சாலை தாசில்தார் அலுவலகம் முன்பு உள்ள பஸ் நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு வந்தனர். பொதுமக்களிடம் சமாதானப்பேச்சு நடத்தினர். ஆனால் அதிகாரிகளுடன் பொதுமக்கள் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×