
சென்னை துறைமுகத்துக்கு கண்டெய்னர் லாரிகள் சரக்குகளை ஏற்றி, இறக்கி செல்ல வசதியாகவும், சரக்கு போக்குவரத்து விரைவு சேவைக்காகவும் மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் உருவாக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்த பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
மதுரவாயல்-துறைமுகம் 18 கி.மீட்டர் தூரத்துக்கு இந்த உயர்மட்ட பறக்கும் சாலை அமைக்கப்படுகிறது. ரூ.3 ஆயிரம் கோடி செலவில் 6 வழிப்பாதையாக உருவாக்கப்பட உள்ளது. இந்த திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து விட்டது.
சென்னை துறைமுகத்தில் பறக்கும் சாலை கட்டுமான திட்டப் பணிக்காக கடற்படை நிலம் ஒதுக்கீடு செய்வது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
சென்னை துறைமுக கழகம், கடற்படை இணைந்து பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின் நிலம் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே மதுரவாயல்- துறைமுகம் பறக்கும் சாலைப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணிகளில் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
பறக்கும் சாலை திட்டப் பணிக்காக நில ஆர்ஜிதம் புனரமைப்பு, மறுசீரமைப்பு ஆகிய பணிகளில் சென்னை துறைமுக பொறுப்பு கழகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை ஈடுபட்டுள்ளது.
மதுரவாயலில் இருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் கூவம் ஆற்றுப் பாதை வழியாக சென்னை துறைமுகத்துக்கு பறக்கும் சாலை வழித்தடப் பாதை விரைவில் அமைக்கப்பட உள்ளது. #MaduravoyalFlyover