search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை செய்யப்பட்ட ரவுடி ஜெகன்
    X
    கொலை செய்யப்பட்ட ரவுடி ஜெகன்

    கண்டமங்கலம் அருகே ரவுடி கொலை - குற்றவாளிகளை பிடிக்க புதுவையில் போலீசார் அதிரடி வேட்டை

    கண்டமங்கலம் அருகே ரவுடி கொலையில் குற்றவாளிகளை பிடிக்க புதுவையில் போலீசார் அதிரடி வேட்டை நடத்தி வருகின்றனர்.
    கண்டமங்கலம்:

    புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள பொறையூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெகன் (வயது 32). பிரபல ரவுடி.

    கடந்த 2014-ம் ஆண்டு புதுவை காங்கிரஸ் பிரமுகர் சுரேஷ் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் ஜெகன் மீது வழக்கு உள்ளது. மேலும் இவர் மீது வில்லியனூர் போலீசில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

    கடலூர் மாவட்டத்தில் நடந்த வழிப்பறி வழக்கில் ஜெகன் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தார். கடந்த 9-ந் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். பின்பு அவர் வில்லியனூர் பொறையூரில் உள்ள தனது மனைவி வீட்டுக்கு சென்றார்.

    நேற்று காலை அவர் வில்லியனூர் உளவாய்க்காலில் மீன் கடை நடத்தி வரும் ராஜேந்திரன் என்பவரின் கடைக்கு சென்றார். அவரிடம் பணம் கொடுக்காமல் மீன் கேட்டார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது ராஜேந்திரனை, ஜெகன் தாக்கினார்.

    இது தொடர்பாக ராஜேந்திரன் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். இதையறிந்த ஜெகன் ஆத்திரம் அடைந்தார். நேற்று மாலை ஜெகன், ராஜேந்திரனின் வீட்டுக்கு சென்று மீண்டும் தகராறு செய்தார்.

    இந்த விவரம் ராஜேந்திரனின் மகன் நவீன் (25) என்பவருக்கு தெரிய வந்தது. ஏற்கனவே நவீனுக்கும், ஜெகனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. தனது தந்தையிடம் ஜெகன் மீண்டும் தகராறு செய்ததால் ஆத்திரம் அடைந்து அவரை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார்.

    இது தொடர்பாக தனது நண்பரிடம் கூறினார். இந்த நிலையில் நேற்று இரவு ஜெகன், விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள சின்ன அமணன்குப்பம் கிராமத்தில் வசிக்கும் ஒரு பெண்ணை பார்க்க சென்றார்.

    இந்த விவரம் அறிந்த நவீன், தனது நண்பருடன் அங்கு சென்றார். அங்குள்ள கோவில் முன்பு ஜெகன் வந்து கொண்டிருந்தபோது திடீரென்று மின்தடை ஏற்பட்டது. இதை பயன்படுத்தி நவீனும், அவரது நண்பரும் சரமாரியாக ஜெகனை வெட்டினர்.

    அவர்களிடம் இருந்து தப்பிக்க ஜெகன் ஓடினார். ஆனால் அவர்கள் ஓட ஓட விரட்டி சென்று ஜெகனை வெட்டி சாய்த்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் ஜெகன் பரிதாபமாக இறந்தார். இதையறிந்த 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கண்ட மங்கலம் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த ஜெகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை தொடர்பாக நவீன் உள்பட 2 பேரை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்திரன், கோபி, தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஷாஜகான் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

    இதில் நவீன் உள்பட 2 பேர் புதுவையில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையொட்டி தனிப்படை போலீசார் புதுவை விரைந்தனர். வில்லியனூர், உளவாய்க்கால் மற்றும் புதுவையை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் குற்றவாளிகளை பிடிக்க அதிரடி வேட்டை நடத்தி வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்ட ரவடி ஜெகனுக்கு வசந்தி (28) என்ற மனைவியும், அரினி (11), சுந்தரி (8) என்ற 2 மகள்களும், அஸ்வின் (7) என்ற மகனும் உள்ளனர்.
    Next Story
    ×