search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: காவலாளி உள்பட 2 பேர் பலி
    X

    மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: காவலாளி உள்பட 2 பேர் பலி

    குடிமங்கலத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் காவலாளி உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    குடிமங்கலம்:

    குடிமங்கலத்தை அடுத்த சுங்காரமடக்கு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் மகேஷ்குமார்(வயது 26). பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இதே ஊரை சேர்ந்தவர் சுப்பிரமணி(57). தனியார் நிறுவன காவலாளி.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மகேஷ்குமாரும், சுப்பிரமணியும் ஒரு மோட்டார் சைக்கிளில் குடிமங்கலத்துக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து ஊருக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை மகேஷ்குமார் ஓட்டினார். சுப்பிரமணி பின்னால் உட்கார்ந்து பயணம் செய்தார்.

    குடிமங்கலம் நால்ரோடு அருகே அவர்கள் வந்த போது மகேஷ்குமார் திடீரென மோட்டார் சைக்கிளை நிறுத்தி திருப்ப முயன்றதாக தெரிகிறது. அப்போது பின்னால் வேகமாக வந்த கார் எதிர்பாராதவிதமாக இவர்கள் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதனால் படுகாயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் குடிமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் மகேஷ்குமார், சுப்பிரமணி ஆகியோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் குடிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    Next Story
    ×